திருச்சிற்றம்பலம்
<> பாரீரே! பாரீரோ <>
வம்மின் உலகீரே! வந்திங்கே தில்லையிலே
..வாமத்தாள் பார்த்திருக்க வாமத்தாள் தனைத்தூக்கி
நம்மை உய்வித்து நமதுபிற வித்துயரை
..நட்டம்உறச் செய்வதற்கு நட்டம்செய் நாதனைக்கண்(டு)
இம்மைப் பயனிதுவே எனஉணர்ந்திவ் வீசனிடம்
..எம்மைக்கா மன்றாடீ என்றுநிதம் மன்றாடி
அம்மை அப்பனிவன் அடியார்கள் பால்காட்டும்
..அருள்திறத்தை அகத்திருத்தி உம்வாழ்வைத் திருத்திடுவீர்*
இம்மைப் பயனிதுவே எனஉணர்ந்திவ் வீசனிடம்
..எம்மைக்கா மன்றாடீ என்றுநிதம் மன்றாடி
அம்மை அப்பனிவன் அடியார்கள் பால்காட்டும்
..அருள்திறத்தை அகத்திருத்தி உம்வாழ்வைத் திருத்திடுவீர்*
பாரனைத்தும் படைத்தளித்துப் போக்கிமறைத் தருள்பவனைப்
.. பாரீர்அவ் வைந்தொழிலும் பாங்காய்த்தன் திருநடத்துள்
சேருவணம் ஆடுமிந்தத் தேவைஉம் தேவையெல்லாம்
.. தீருமிவன் தரிசனத்தால் தினமுமவன் திருமுன்கண்
நீரொழுக நீர்நின்று நெக்குருகிப் பெரும்புலியூர்
.. நிமலனிவன் அடியினைஉம் நெஞ்சினடி நிறுத்திடுவீர்
ஓருருவம் இல்லானை ஓர்ந்திடுவீர் உள்ளிருக்கும்
.. உண்மையினைத் தன்நடத்தில் உணர்த்துமவன் உருவினிலே.
அருமறைகள் அறியவொணா அருவபரம் பொருளிங்கே
..அம்பலத்தில் நீர்காண ஆடுகின்றான் மீண்டும்நீர்
கருவறையை நாடாமல் கருத்தனிவன் காத்திடுவான்
..கருணைபொழி திருவிழிசேர் கமலமுகக் கடவுளிவன்
ஒருபதத்தைத் தூக்கிஉம்மை உயர்பதத்தில் ஏற்றிவைப்பான்
..ஓரடியால் அகந்தையினை ஒழித்திடுவான்* முன்னமொரு
தருவடியில் மோனம்வழி சாற்றுபொருள் தருவான்நம்
..தந்தையிவன் தாளடியைச் சார்ந்திடநீர் விரைவீரே.
(வாமத்தாள்= இடது பாதம், இடப்பாகத்தில் உள்ள உமையன்னை; திருத்துதல் = செவ்வியதாக்குதல்; சீர்ப்படுத்தல்; ஒருபதம்-தூக்கிய திருவடி; ஓரடி= ஊன்றிய திருவடி; இது அடிக்குள் மடக்கு (ஒருசொல் மீண்டும் வருதல்) அமைந்த விருத்தப்பா.)
அனந்த் 5-4-2016
No comments:
Post a Comment