திருச்சிற்றம்பலம்
<> தாளேனே <>
ஆற்றா தரற்றும் அடியேனின்
தொல்லையறத்
தோற்றா திருக்கத் துணிந்தனையோ
– போற்றியுனை
விண்ணோரும் மாலயனும் வேண்டிநிற்க
ஏழையென்னைக்
கண்ணோக்க நேரமின்மை காரணமோ
– தண்சடையில்
மேவிக் குளிர்விக்கும் வெண்டிரையா
ளோடுன்னைத்
தாவி அணைக்கும் தளிருடலாள்
கூட்டினிலே – பாவியெனைப்
பற்றி நினைக்கப் பரமனுனக்(கு) ஓர்நொடியும்
சற்றும் கிடைத்திலையோ சங்கரா
– பற்றியகை
ஓட்டில் இடும்பலிக்காய் ஊரெல்லாம்
சுற்றிவந்த
வாட்டத்தில் என்னை மறந்தனையோ- ஆட்டத்தின்
ஓட்டத்தில் இங்குயான் உள்ளேன்
எனும்நினைப்பும்
ஓட்டம் பிடித்ததுவோ உத்தமர்
– பாட்டமுதை
அள்ளிப் பருகிற்கும் அவ்வேளை அடியேனின்
கள்ளம் நிறைமனத்தைக் கண்டென்னை ஒதுக்கினையோ
இன்னும் காக்கமனம் இளகிலையேல்
என்செய்வேன் எவர்க்குரைப்பேன் ஈசஇனித்
தாளேனே.
…
அனந்த் 29-1-2025
No comments:
Post a Comment