Tuesday, February 25, 2025

 

Monday, February 24, 2025

இன்று மகாசிவராத்திரி சிறப்பு நன்னாள்.  

                                             திருச்சிற்றம்பலம்

                                         <> என் செய்வேன்? <> 

                

 

                        ஆற்றா தரற்றும் அடியேனின் முறையீட்டை

ஏற்றாய்நீ ஏலா திருப்பதுமேன் போற்றியுனை

 

விண்ணோரும் மாலயனும் வேண்டிநிற்க ஏழையென்னைக்

கண்ணோக்க நேரமின்மை காரணமோ – தண்சடையில்

 

மேவிக் குளிர்விக்கும் வெண்டிரையா ளோடுன்னைத்

தாவி அணைக்கும் தளிருடலாள் கூட்டினிலே – பாவியெனைப்

 

பற்றி நினைக்கப் பரமனுனக்(குஓர்நொடியும்

சற்றும் கிடைத்திலையோ சங்கரா – பற்றுதலை

 

ஓட்டில் இடும்பலிக்காய் ஊரெல்லாம் சுற்றிவந்த

வாட்டத்தில் என்னை மறந்தனையோஆட்டத்தின்

 

ஓட்டத்தில் இங்குயான் உள்ளேன் எனும்நினைப்பும்

ஓட்டம் பிடித்ததுவோ உத்தமர் – பாட்டமுதை

 

அள்ளிப் பருகிற்கும் அவ்வேளை அடியேனின்

கள்ளம் நிறைமனத்தைக் கண்டோ ஒதுக்கினைநீ

 

இன்னுமுன் நெஞ்சம் இளகிலையேல் யார்க்குரைப்பேன்

என்செய்வேன்  ஈசா இனி. 

 

(நேரிசைக் கலிவெண்பா. ஏற்றாய் = மாட்டை வாகனமாகக் கொண்டவனேவெண்டிரையாள் = வெண்மையான அலையுள்ள கங்கையாறு.) 

                                           

(நேரிசைக் கலிவெண்பா. ஏற்றாய் = மாட்டை வாகனமாகக் கொண்டவனேவெண்டிரையாள் = வெண்மையான அலையுள்ள கங்கையாறு.) 

 

                                                               … அனந்த் 25-2-2025

No comments: