Thursday, November 23, 2023

திருச்சிற்றம்பலம்

இன்று பிரதோஷ நன்னாள்.


                       <> அண்டி வந்தேன் <>


                     


ஆசை மிகுந்துன் அருட்பதம் பற்றிட அண்டிவந்தேன்

ஈச! அருள்தர ஏன்நீ தயங்குவை என்றறியேன்

நீச னெனத்தாய் மகவினை யாங்ஙணும் நீக்குவளோ

தேசுடன் தில்லைத் தலத்தில் நடமிடு தெள்ளமுதே.


                                  🌺🌺🌺


                   <> உவகை ஒளி <>


   

   காலம் இல்லா முழுப்பொருளைக்

   ... கண்டஞ் செய்து பற்பலவாய்க்

   கோலங் கொடுத்துக் குவலயத்தில்

   ... கூட்டி வைக்கும் மாயையதன்

   சாலம் உணர்ந்த ஞானியவன்

   ... சலியா தகத்தில் பன்மையெழும்

 மூலம் நாடி மெய்யுணர்வில்

... மூழ்கி முழுமை உற்றிடுமே.  


    .... அனந்த் 24-11-2023  

No comments: