திருச்சிற்றம்பலம்
<> நாட்டம் கொள்ளாயோ? <>
என்னுள் உறையும் உனையறியா(து)
.. உலகே உண்மை எனஇங்கே
அன்னை இழந்த குழவியைப்போல்
.. அழுமிவ் வேழை நிலையறிந்தும்
இன்னும் எனக்குன் அருளீயா
.. திருப்ப துனக்கோர் விளையாட்டோ?
பொன்னம் பலத்தில் புன்முறுவல்
.. புரிந்து நிற்கும் பொருளிதுவோ?
************
உருகும் ஒருகால் உன்னருளின்
.. உயர்வை நினைத்து மறுகணமே
இறுகும் இரும்பாய் எதையெதையோ
.. எண்ணி என்நெஞ்(சு) அதன்பின்னர்
மறுகும் என்றன் மடைமைகண்டு
.. வருந்தி இந்த வகையாக
உருளும் என்னை உய்விக்க
.. உன்றன் உள்ளம் உருகாதா?
************
சொல்லில் அடங்கா உன்சீரைத்
... துதிக்க எண்ணி அமர்ந்தபினர்
பொல்லேன் எனது புன்மையினைப்
... புகலத் தொடங்கிப் பயனேதும்
இல்லா(து) இனிய பொழுதினைநான்
... இழப்பேன் இந்த நிலைமாற
நல்லோ னாக எனைமாற்ற
... நாதா! நாட்டம் கொள்ளாயோ?
அனந்த் 30-8-2020
No comments:
Post a Comment