Saturday, May 4, 2024

                             இன்று பிரதோஷ நன்னாள்

                              திருச்சிற்றம்பலம்


   <> துணையடி சேர்ப்பாய் <>



              


வெண்மதி கங்கை கொன்றை

.. விளங்கிடும் சடையோய்! உன்றன்


கண்கவர் கோலம் கண்டும்

.. கருத்திலோர் நெகிழ்வு மின்றி


மண்ணிலோர் விலங்காய் வாழ்ந்த

.. வகையினை இன்றென் நெஞ்சில்


எண்ணிநான் வருந்தி உன்றன்

.. இணையடி சேர்ந்தேன் ஐயே!


          🌹🌹🌹

 

ஐயனே ஐயோ வென்றுன்

.. அடியிணைக் கீழ்வி ழுந்தேன்


பொய்யனே ஆயி னும்மென்

.. பிழையெலாம் பொறுப்பாய் என்று


மெய்யடி யார்கள் சொல்லல்

.. மிகையிலை என்று நம்பிக்


கையிணை குவித்துன் முன்னே

கதறினேன் காத்தி டாயோ?


         🌹🌹🌹


ஆயபல் பிழைகள் யாவும்

ஆக்கிய பிண்ட மாகக்


காயமொன் றுடையேன் பாவக்

.. காற்றையே நிரப்பி வைத்த


தீயதோர் பாண்ட மிஃதைச்

.. சுமந்துல கலையு மென்னைத்


தூயவ னாக்கி உன்றன்

துணையடி சேர்த்தி டாயோ?


          🌹🌹🌹

                                             ..அனந்த் 4/5-5-2024

No comments: