Friday, April 13, 2018

குடி வைத்தாய்

          திருச்சிற்றம்பலம்

         <> குடி வைத்தாய் <> 




பெண்ணொன்று தந்தவன் பெருவரை முடியில்நீ
.. பீடுடன் வீற்ற பின்னோர்
பெண்ணையுன் முடியிலே குடிகொள வைத்(து)அவள்
…… பேரிலோர் கவனம் வைக்கக்

கண்ணொன்று நெற்றியில் கரந்துநீ வைத்ததன்
… கருத்தினை அறிந்தி டாமல்
…. காயத்தில் பாதியைக் கொண்டவுன் பாரியாள்
…… கடுஞ்சினங் கொண்ட தாலே

விண்ணொன்று கூரையாய் வெண்டலை ஓட்டுடன்
..  வீதியில் நடக்க வைத்த
…. வேதனை தீரவோ விரிகிளை தருவடி
…… வீற்றுவே தாந்தி யானாய்?

பண்ணொன்று பாடியே பகடிநான் செய்யினும்
… பரிந்தெனை ஏற்குமுன்றன்
…. பாதத்தின் கீழிலென் பிழையெலாம் போக்கிடப்
…… பரமநான் குடிகொள்வனே.

(பகடி = பரிகாசம், விகடம், கூத்து.) 
அனந்த் 13-4-2018 பிரதோஷ நன்னாள்

No comments: