உ திருச்சிற்றம்பலம்
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> மனத்திற்கோர் மடல் <>
செல்லும் வழிமுடிந் தாச்சு - வேறு
... திசையில் திரும்பிடும் நேரம்வந் தாச்சு
தொல்லை தருமுடல் நோயில் - படும்
..துன்பத்தில் நீவாடும் இத்தறு வாயில்
இல்லை துணையுனக் கென்று - நீ
..ஏங்கிடக் காரணம் சொல்கின்றேன் இன்று.
அல்லும் பகலும் அலைந்தாய் – உன்றன்
.. ஆசைக்கு வானமே கூரையாய் வேய்ந்தாய்
சொல்லில்பொய் யாவு முரைத்தாய் – அற்பச்
… சுகத்தைப் பெறப்பல தீமையி ழைத்தாய் (செல்லும்)
தன்னலம் கொண்டு திரிந்தாய் – தலை
.. தாழ்தல் பிழையென்று சாற்றி நடந்தாய்
உன்னை எதிர்த்தவர் தம்மைத் – தூற்றி
..ஒடுக்க உபயோகித் தாய்கொடும் வன்மை.
திரையோ(டு) உரை,நடை மாற்றம் – உன்றன்
.. தெம்பில்லா உள்ளத்தில் காணும்ஏ மாற்றம்
புரையொடு நாளும்போ ராட்டம் - கண்கள்
.. பூத்துத் தெரியு(து) ஒருபனி மூட்டம் (செல்லும்)
பொருளை நினைத்தேனோ தேட்டம் - நீ
.. போவதில் தான்இங்(கு) இருப்பவர் நாட்டம்
இருக்குமிந் நாளில்ஏன் காட்டம் – பிறர்
.. ஏச்செலாம் கேளா(து) எடுப்பாய்நீ ஓட்டம் (செல்லும்)
செருக்கோடு வாழ்ந்திட்ட காலம் – தன்னில்
… தெம்போடு செய்த பலப்பல ஜாலம்
இருக்கும் அவஸ்தைக்கு மூலம் – அதை
.. இன்னும் உணரா(து) எழுப்புவாய் ஓலம் (செல்லும்)
உள்ள மிகச்சில நாளில் -உனக்(கு)
.. உதவக் கரம்நீட்டு வோனை மனத்தில்
உள்ளின் கிடைக்கும்மெய்ஞ் ஞானம் – அதில்
..ஊறிப் பருகுவாய் பேரின்பப் பானம் (செல்லும்)
அம்பலத் தாடிடும் ஈசன் – உனக்(கு)
.. அருளிடக் காத்துநிற் பானந்த நேசன்
நம்பி அவன்தாளைப் பற்று – அந்த
.. நாளேநீ ஆவாய் துயரேதும் அற்று. (செல்லும்)
.. அனந்த் 13-5-2026