Wednesday, May 13, 2026

 உ  திருச்சிற்றம்பலம் 


இன்று பிரதோஷ நன்னாள். 

திருச்சிற்றம்பலம் 


     <> மனத்திற்கோர் மடல் <>





 செல்லும் வழிமுடிந் தாச்சு - வேறு

... திசையில் திரும்பிடும் நேரம்வந் தாச்சு


தொல்லை தருமுடல் நோயில் - படும்

..துன்பத்தில் நீவாடும் இத்தறு வாயில்

இல்லை துணையுனக் கென்று - நீ

..ஏங்கிடக் காரணம் சொல்கின்றேன் இன்று.  

அல்லும் பகலும் அலைந்தாய் – உன்றன்

.. ஆசைக்கு வானமே கூரையாய் வேய்ந்தாய்

சொல்லில்பொய் யாவு முரைத்தாய் – அற்பச்

… சுகத்தைப் பெறப்பல தீமையி ழைத்தாய்  (செல்லும்)


தன்னலம் கொண்டு திரிந்தாய் – தலை

.. தாழ்தல் பிழையென்று சாற்றி நடந்தாய்

உன்னை எதிர்த்தவர் தம்மைத் – தூற்றி

..ஒடுக்க உபயோகித் தாய்கொடும் வன்மை. 


திரையோ(டு) உரை,நடை மாற்றம் – உன்றன்

.. தெம்பில்லா உள்ளத்தில் காணும்ஏ மாற்றம்

புரையொடு நாளும்போ ராட்டம் - கண்கள் 

.. பூத்துத் தெரியு(து) ஒருபனி மூட்டம்  (செல்லும்)


பொருளை நினைத்தேனோ தேட்டம் - நீ

.. போவதில் தான்இங்(கு) இருப்பவர் நாட்டம் 

இருக்குமிந் நாளில்ஏன் காட்டம் – பிறர்  

.. ஏச்செலாம் கேளா(து) எடுப்பாய்நீ ஓட்டம்  (செல்லும்)


செருக்கோடு வாழ்ந்திட்ட காலம் – தன்னில்

… தெம்போடு செய்த பலப்பல ஜாலம்

இருக்கும் அவஸ்தைக்கு மூலம் – அதை

.. இன்னும் உணரா(து) எழுப்புவாய் ஓலம்  (செல்லும்)


உள்ள மிகச்சில நாளில் -உனக்(கு)

.. உதவக் கரம்நீட்டு வோனை மனத்தில்

 உள்ளின் கிடைக்கும்மெய்ஞ் ஞானம் – அதில் 

 ..ஊறிப் பருகுவாய் பேரின்பப் பானம்  (செல்லும்)

    

அம்பலத் தாடிடும் ஈசன் – உனக்(கு)

.. அருளிடக் காத்துநிற் பானந்த நேசன்

நம்பி அவன்தாளைப் பற்று – அந்த

.. நாளேநீ ஆவாய் துயரேதும் அற்று. (செல்லும்)


                                         .. அனந்த் 13-5-2026

No comments: