Wednesday, June 1, 2016

அரியும் அரனும் அவன்

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

 

<> அரியும் அரனும் அவன் <>


அரியான் அவனை அறியான் பவத்தை

அரியான் அரியான் அறியான் – அறைவேன்

அரியான் அலன்றன் அடியார்க்(கு) அவரைப்

பிரியான் பெரியான் அவன்.


சிவன்:

எளிதில் எட்டிட இயலாதவன்*; அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான்** (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)  திருமாலும் அறியாதவன் (இது சோதிப் பிழம்பாய் நின்ற சிவனின் அடியைத் திருமால் காண இயலாததைச் சுட்டும்.) எனினும், அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் அல்லன், எளியனாவன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் நான் கூறுவேன்.
* அரியானை அந்தணர்தம் சிந்தையானை.. – அப்பர் தேவாரம்
** அரிதல்= அறுத்தல்; அழித்தல்; "அரிவாய் அடியோடும் என் அகந்தையையே”- கந்தர் அனுபூதி

திருமால்:

அரி என்ற பெயரைத் தாங்கியவன்.  அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான் (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)   அவன் (நர)சிங்க உருக்கொண்டவன் அல்லது வானோரிடைச் சிங்கம் போன்றவன்**.  அவனுடைய பெருமையைக் கேட்டு அறிந்த நான்*, அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் ஆகாத எளியன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் கூறுவேன்.
* அரி = சிங்கம்
**அறி யான் – வினைத்தொகை

(இது மடக்கணி அமைந்த சிலேடை வெண்பா.)


அனந்த் 2-6-2016

Thursday, May 19, 2016

குறை இல்லை

திருச்சிற்றம்பலம்


<> பொருள் இல்லை <>

Inline image 3

சுட்டுப் பொசுக்கின் சாம்பரெனத்
.. தூசாய் மாறும் இவ்வுடலைத்

தொட்டுத் தடவிப் பேணிவந்து
.. சுகமீ தென்று திரிந்தேனை

நட்டம் ஒன்றை நீகாட்டி
.. நலமீ தென்றென் உளம்புகுந்து

விட்ட பின்னர் குறையென்று
.. விளம்பப் பொருளொன்(று) எனக்கிலையே


<> எல்லை இல்லை <>

Inline image 4

எட்ட நின்றுன் சொலற்கரிய
.. எழிலைச் சுவைப்பேன் ஒருபோதில்

தொட்டுன் மேனி தனில்மலரைத்
.. தூவி மகிழ்வேன் ஒருவேளை

கட்டிப் பிடித்துன் காலடியில்
.. கதறி அழுவேன் ஒருநேரம்

நட்டம் புரியும் நாத!உனை
.. நண்ணும் வகைக்கோர் வரையுண்டோ?


<> இணை இல்லை <>

Inline image 1

அழும்போ தென்னை எடுத்தணைக்கும்
.. அன்னை ஆவாய் அடுத்தகணம்

விழும்போ தென்றன் அப்பனெனத்
.. மேலே தூக்கி மகிழ்விப்பாய்

தொழும்போ தெனக்குப் போதகனாய்
.. தோன்றி வாழ்வின் பொருளுரைப்பாய்

முழுதாய் என்னை ஆட்கொண்ட
.. முதலே! உனக்கோர் இணையிலையே.


<> குறை இல்லை <>

Inline image 2

இல்லை இனியெற்(கு) எக்குறையும்
.. என்றின்(று) இறுமாந் திருக்கு(ம்)வண்ணம்

தில்லைப் பதியில் நடமாடும்
..  திருக்கோ லத்தைக் காட்டிநின்றாய்

வல்லோய்! உன்றன் வண்மையெனும்
.. வாரி தன்னில் நனையுமென்னைத்

தொல்லை இனியும் தொடர்வதுண்டோ
.. சொல்லற் கரிய சீருடையோய்!


அனந்த் 19-5-2016

Friday, May 6, 2016

ஆராயவொண்ணாதான்

திருச்சிற்றம்பலம் 




1.     <> ஆராயவொண்ணாதான் <>
            
பிட்டுக்கு மண்சுமப்பான் பிண்ணாக்குப் பணியை ஏற்பான்

கொட்டுக்குச் சடைவிரிப்பான் கொட்டுக்கு நடமும் செய்வான்

முட்டுக்கு மேலுடுப்பான் முட்டுக்குத் தாளை ஈவான்

திட்டுக்கு மனங்களிப்பான் தேட்டுக்குள் அடங்காத் தேவே.

 (பிண்ணாக்கு = பிள்நாக்குபிளந்த நாக்குபணி=பாம்புகொட்டுநீர் சொரிகைமிருதங்கம் போன்ற வாத்திய ஒலிமுட்டு = முழந்தாள்பற்றுக்கோடு;  திட்டுசுந்தரமூர்த்திநாயனாரின் வசைச்சொல்தேட்டுதேட்டம்ஆராய்வு.)



2.  <> மாயா ஜாலம் <>

இடமொரு பெண்ணாகும் ஏந்தும் மிடற்றில்

விடமோர் மணியாய் விளங்கும் - நடத்தில்விழும்

தோடு செவியேறித் தொங்குமொரு தொண்டுகிழ

மாடும் புரவிவிஞ்சு மாம்!



... அனந்த் 4-5-2016

Tuesday, April 19, 2016

அம்மையும் அப்பனும்

இன்று பிரதோஷ நன்னாள். மேலும், மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சி- சுந்தரேசர் திருக்கல்யாணத் திருநாள்.

                                                                  திருச்சிற்றம்பலம்
    
                                    Inline image 5                                                         Inline image 3  

                                                         Inline image 4   
பாடலை எளிதாகப் படிக்க: 

<> அம்மையும் அப்பனும் <>

தங்கை தனிலோர் ஓட்டை ஏந்தித்


..தனியாய்த் திரிந்த ஐயன்
...தரணி வாழும் மாந்தர் உய்யத்
... தானோர் சுந்தரனாய்ச்

சங்கம் முழங்கும் மதுரை நகரைச்
... சார இவனழகு
.....தனில்மீன் விழியாள் தனையே இழந்த
...... சரிதம் அறிவோமே!

எங்கண் முனமிவ் இருவர் கூடி
...இலங்கும் எழில்காணில்
.....எங்கும் இவருக்(கு) இணையே இலையென்(று)
.......எவர்தாம் உரையாரே? 

எங்கட் கன்னை தந்தை எனவே
..என்றும் அருள்புரியும்
...இவர்தாள் பணிய விரைவீர் இந்த
... இனிய நாளினிலே!


அனந்த் 19-4-2016

Monday, April 4, 2016

பாரீரே! பாரீரோ

திருச்சிற்றம்பலம் 

Inline image 1

<>  பாரீரே! பாரீரோ <>

வம்மின் உலகீரே! வந்திங்கே தில்லையிலே
..வாமத்தாள் பார்த்திருக்க வாமத்தாள் தனைத்தூக்கி
நம்மை உய்வித்து நமதுபிற வித்துயரை
..நட்டம்உறச் செய்வதற்கு நட்டம்செய் நாதனைக்கண்(டு)
இம்மைப் பயனிதுவே எனஉணர்ந்திவ் வீசனிடம்
..எம்மைக்கா மன்றாடீ என்றுநிதம் மன்றாடி
அம்மை அப்பனிவன் அடியார்கள் பால்காட்டும்
..அருள்திறத்தை அகத்திருத்தி உம்வாழ்வைத் திருத்திடுவீர்*
பாரனைத்தும் படைத்தளித்துப் போக்கிமறைத் தருள்பவனைப்
.. பாரீர்அவ் வைந்தொழிலும் பாங்காய்த்தன் திருநடத்துள்
சேருவணம் ஆடுமிந்தத் தேவைஉம் தேவையெல்லாம்
.. தீருமிவன் தரிசனத்தால் தினமுமவன் திருமுன்கண்
நீரொழுக நீர்நின்று நெக்குருகிப் பெரும்புலியூர்
.. நிமலனிவன் அடியினைஉம் நெஞ்சினடி நிறுத்திடுவீர்
ஓருருவம் இல்லானை ஓர்ந்திடுவீர் உள்ளிருக்கும்
.. உண்மையினைத் தன்நடத்தில் உணர்த்துமவன் உருவினிலே.

அருமறைகள் அறியவொணா அருவபரம் பொருளிங்கே
..அம்பலத்தில் நீர்காண ஆடுகின்றான் மீண்டும்நீர்
கருவறையை நாடாமல் கருத்தனிவன் காத்திடுவான்
..கருணைபொழி திருவிழிசேர் கமலமுகக் கடவுளிவன்
ஒருபதத்தைத் தூக்கிஉம்மை உயர்பதத்தில் ஏற்றிவைப்பான்
..ஓரடியால் அகந்தையினை ஒழித்திடுவான்* முன்னமொரு
தருவடியில் மோனம்வழி சாற்றுபொருள் தருவான்நம்
..தந்தையிவன் தாளடியைச் சார்ந்திடநீர் விரைவீரே.    

(வாமத்தாள்= இடது பாதம், இடப்பாகத்தில் உள்ள உமையன்னை; திருத்துதல் = செவ்வியதாக்குதல்; சீர்ப்படுத்தல்; ஒருபதம்-தூக்கிய திருவடி; ஓரடி= ஊன்றிய திருவடி; இது அடிக்குள் மடக்கு (ஒருசொல் மீண்டும் வருதல்அமைந்த விருத்தப்பா.)


அனந்த் 5-4-2016