Tuesday, December 25, 2012

காண வேண்டாமோ?

<> காண வேண்டாமோ? <>
திருச்சிற்றம்பலம்

சுற்றம் மனையென் றென்நாளைத் தொலைத்த பின்னர் உன்நினைவு

… சற்றென் மனத்தில் தோன்றிடஉன் திசையை நோக்கி அடிவைத்தேன்

பெற்ற தாய்போல் பரிவுடன்நீ பறந்தென் பாலே வரக்கண்டு

… பிறிதோர் அடிநான் வைக்கையிலே பிரிந்து செல்லல் முறையாமோ?

வற்றிக் கிடந்த கிணறொன்றில் வழுக்கி விழுந்த ஒருவன்கைப்

… பற்றக் கயிற்றை நீட்டியபின் பட்டென் றறுத்தல் முறையாமோ?

சிற்றம் பலத்துள் நடமாடும் தேவ! உன்றன் திருவுருவில்

.. சித்தம் இழந்தேன், மீண்டுமுனைத் தெரிசித் திடுமா(று)அருளாயோ?

… அனந்த் 25-12-2012

யாப்பு: பன்னிரண்டு சீர் ஆசிரிய விருத்தம். அரையடி:தேமா, மா, காய் மா, மா, காய். ஈற்றுச்சீர் புளிமாங்காய்; 1,4, 7,10 சீர் மோனை.
குறிப்பு: சிதம்பரத் திருத்தலத்தில் இம்மாதம் இருபத்தெட்டாம் தேதி அதிகாலையில் ஆருத்ரா அபிஷேகமும் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.சென்ற ஆண்டு இத்திருக்காட்சியைக் கண்டு களிக்கும் பேறளித்தான்.
------------
பின்னூட்டம்:

ஓரடி உன்னடி என்னிடம்வந்தது
ஓரீரைந்தடி உன்னிடம் வேகமாய்
ஓடோடி வந்ததை நீஅறியாயோ
பாடும்பாடல் கேட்டு பாகாயுருகி
சித்தமெலாம் சிவனாய் இருக்குமென்
பத்தன் படும்தொல்லை நீங்க
இக்கணமே உன்னுள்ளே வந்திட்டேன்
 தக்கணமே உள்ளத்தில் பார்த்துக்கொள்

(இலக்கணம் இதுக்கு இல்லே.. தலைக்கனமும் எனக்கு இல்லே)

.. திவாகர்
----

என் முறையீடு கேட்டு அந்த சர்வேச்வரனை வரவழைத்ததற்கு நன்றி. அவன் தரிசனத்தை இழந்தது போல நம்மை எண்ண வைப்பதும் அவனே அல்லவா?.
’அலகி லாவிளை யாட்டுடை யான்அவன்’..

.. அனந்த்
----------------

இப்படி ஏங்கித் தவிக்கும் பக்தனை விட்டு எங்கு செல்ல முடியும் ஈசனால்..

//பெற்ற தாய்போல் பரிவுடன்நீ பறந்தென் பாலே வரக்கண்டு
… பிறிதோர் அடிநான் வைக்கையிலே பிரிந்து செல்லல் முறையாமோ?//
பாய்ந்து வருவதற்கு முன், சற்றுப் பின்னால் செல்வது இயற்கைதானே.. :)

//ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.சென்ற ஆண்டு இத்திருக்காட்சியைக் கண்டு களிக்கும் பேறளித்தான். //நாங்கள் கேட்டுக் களிக்கும் ஆனந்ததையும் அளித்தான்.

.. திருமால்
--------------
அன்புள்ள அனந்த் ஐயாவிற்கு
உங்கள் பிரதோஷ பாடல்கள் ஒவ்வொன்றின் மூலமாக சிவ பெருமானின் தரிசனம் காணப் பெற்றோம் . ஒவ்வொரு சொல்லும் அவன் நாமம் சொல்லும் அழகே அழகு.
 
..அகிலா
--------------------------
பாடல் பற்றி அன்புடன் கருத்துச் சொன்ன திருமால், அகிலாவிற்கு எனது நன்றி.
..அனந்த் 26-12-2012

Monday, December 10, 2012

கருணை செய்வாய் 10-12-2012

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்  


திருச்சிற்றம்பலம் 












 

<> கருணை செய்வாய் <>



உண்ணுதல் உறங்குதல் ஒருபயன் அளித்திடாச் செயல்பல புரிவ தான

… உடலெனும் கருவியை ஒருபுறம் தாங்கிமற் றொருபுறம் அதனி னுள்ளே

எண்ணமாம் குமிழியை இடைவிடா தெழுப்பிடும் இயந்திரம் என்று காணும்
… என்மனம் என்னுமோர் சுமையினை இங்குநான் தாங்கியே சோர்ந்து நிற்க

வண்ணமாய்த் தில்லையில் வதிந்திடும் ஈச!நீ மாறிடா மகிழ்ச்சி யோடு
… மத்தளம் ஒலித்திட மாதுமை களித்திட நாட்டியம் ஆடி நிற்றல்

கண்முனே காட்டியென் கனத்தினை அகற்றிடத்  திருவுளம் கொள்வை யாகில்
.கணத்திலென் துயரெலாம் காற்றிலே தூசெனப் பறந்திடும் கருணை செய்யே!.


(தூசு = பஞ்சு, புழுதி; செய்யே = செய்வாய்)
யாப்பு: பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்;

மோனை: 1,3 (பெரும்பான்மை),8,10 சீர்கள்,


குறிப்பு: இந்தியாவில் டிசம்பர் 11 அன்று பிரதோஷம்.  
பாடலின் இசை ஒலிப் பதிவு (mp3):  http://raretfm.mayyam.com/ananth/karuNai_ceyvAy

=============================================================================
பின்னூட்டங்கள்:

2012/12/10 Chandar Subramanian <chandarsubramanian@gmail.com>
அருமையான விளக்கம்
நன்றி, சந்தர்.

’’விளக்கம்’ என்று நீங்கள் எழுதியதைப் பார்த்தவுடன், இப்பாடலைப் பற்றி மேலதிகமாக எனது விளக்கத்தைத் தரலாமெனத் தோன்றியது.

முந்தைய பிரதோஷப் பாடலில் இரண்டு மாறுபட்ட காட்சிகள் தென்பட்டதைப் போல, இங்கு, ஒருபுறம் உடலென்னும் சுமை போதாதென்று அதனினும் பளுவான ஒரு சூக்குமமான கருவியாக இயங்கும் மனத்தையும் சேர்த்துச் சுமந்து, சுமந்து தளவுற்று வருந்தும் நான். மறுபுறம், நேர் மாறாக, நிரந்தரமான ஆனந்தத்துடன், தன் பக்கலில் உள்ள உமையவளையும் களிப்பிலாழ்த்தி, அண்டசராசரப் பளுவையும் அலட்சியமாகத் தாங்கியவாறு தில்லை மன்றில் நின்றாடும் பரமேசன். இவ்வாறு காணும் இருவகையான நிலை மாற வேண்டுமெனில், அதற்கு அவ்விறைவன் என்பால் மனமிரங்கி என் அகக்கண்முன் தனது பரமானந்த உருவைக் காட்டி அதை என்னுள் நிலைபெறச் செய்வதே வழியாகும் என்பது பாடலின் கருத்து.
அனந்த்
11-12-2012
 -----------------------
ஒலி இணைப்பிற்கு நன்றிகள் ஐயா. பலமுறை கேட்டேன்; கேட்கத் தூண்டுகிறது!

அன்புடன்,
அர்விந்த்
----------------

Tuesday, November 27, 2012

காத்து நிற்பாய் 25-11-2012

திருச்சிற்றம்பலம்
<> காத்து நிற்பாய் <>














எள்ளள வேனு முன்னை

… இறைஞ்சிட நினையார் தாமிங்(கு)

…..எடுத்துள உடலம் தன்னை

…… ஏனையோர் ஒருநாள் கையால்

அள்ளியோர் காட்டில் சுள்ளி

… அடுக்கிய சிதையாம் தட்டில்

…..அளித்திடும் வேளை நோக்கி

…… ஆங்கதைச் சுவைப்ப தற்காய்

ஒள்ளெரி காத்து நிற்கும்

… உண்மையை உணர்ந்துன் பேரை

…… ஒருதரம் உரைக்கின் காக்கும்

…… உறுதியோ(டு)ஒற்றைக் காலில்

வெள்ளிய சடையோய்! தில்லை

… வெளியினில் காத்து நிற்கும்

…..விளிம்பிலாக் கருணைப் பாங்கை

…… விதத்தலும் ஆமோ ஐயே!

பாங்கு = தகைமை, அழகு; விதத்தல் = சிறப்பித்துக்கூறல், மிகுத்துரைத்தல்.

யாப்பு: பன்னிருசீர் விருத்தம்:அரையடி: கூவிளம் மா தேமா கூவிளம் மா தேமா; 1,4,7,10 சீர் மோனை

குறிப்பு:ஒருபக்கத்தில் மனிதர் இறந்தபின் சுற்றத்தார் அவரது மாமிச மயமான உடம்பைச் சிதை என்னும் தட்டில் இட்டுத் தனக்கு அளிப்பதை எதிர்பார்த்துக் காத்து நிற்கும் நெருப்பு. மறுபக்கத்தில், இவ்வாறு அழியும் உடலின் தன்மையைத் தாம் உயிரோடு வாழும்போதே உணர்ந்து சிவ நாமத்தை ஒருதரமேனும் மாந்தர் கூறினால் அவருக்கு அருள்புரிவேன் என்னும் உறுதியோடு தில்லைத் தலத்தில் காத்து நிற்கும் நடராசப் பெருமான். இவ்வாறு மாந்தருக்காகக் காத்திருக்கும் இருவரைச் சுட்டி, அம்பலத்தரசனின் சொல்லில் வடிக்க இயலாக் கருணை உள்ளத்தைப் போற்றுவது இப்பாடலின் கருத்து.

..அனந்த்

25-11-2012
-------------------------------------------------------------------------------------------
ண்ணா (பிரதோஷ) நோன்பின் பேறு உங்களின் வரிகளென்று மனசு படிக்கப் படிக்க மகிழ்கிறது ஐயா. படிக்க முடிந்ததில் பேரின்பம் கொண்டேன்..  நன்றியும் வணக்கமும்..

வித்யாசாகர்
-----------
Nice song highlighting the choice that we have! 
நிலையாமையை நினைவுறுத்தும் அழகிய பாடல்.
காத்து நிற்கும் எரி!
காத்து நிற்கும் அரன்!
அன்புடன், வி. சுப்பிரமணியன்

ஒரு முறை நாமம் சொன்னால் ஓடி வந்து காப்பான் இவன் .. சிவன் எனும் அழகான பாடல்..
நீங்கள் கொடுத்த விளக்கம் .. வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும் .
அன்புடன், அகிலா
------------
முரண்களைச் சமன் செய்யும் முதல்வனின் இருகரங்களைப் பற்றிய உங்களின் வித்தியாசமான (அர்த்தமுள்ள) பார்வை மிக அருமை. "ஒற்றைக் காலில்" என்பதைச் சிலேடையாக அமைத்த விதமும் அருமை.
சந்தர் சுப்பிரமணியன்
----------
நல்ல கவிதை, நல்ல பொருள் விளக்கமும் கூட.
சங்கரன்
-----------------

> எள்ளள வேனு முன்னை
> …
இறைஞ்சிட நினையார்
Dear Sri Ananth,
You seem to have reduced the meaning of the above phrase to
மனிதர் in
your explanation. The phrase tells much more! One who things of the
God when alive retains some connection with Him upon rejecting his
body to the fire. God awaits this stage to bless that one who never
cared to pray to Him when alive!
It seems to me that Lord Pradhosha moorthy has brought out His
Svabhaavam through your poetry, and you may need to read it again to
realise it.
Best wishes,
gopal.
------------
>> God awaits this stage to bless that one who never cared to pray to Him when alive!

அன்புள்ள கோபால்,

உங்கள் அழகிய விளக்கத்திற்கு நன்றி. சைவசித்தாந்தத்தில் இக்கருத்தை ஐந்தொழில்களில் ஒன்றான திரோதானம் (மறைத்தல்)குறிக்கும். இச்சொல்லுக்கு மிகவும் ஆழமான பல விளக்கங்கள் உண்டு. ஒரு எளிய கண்ணோட்டத்தில் பார்க்கையில், படைத்தல்,காத்தல், அழித்தல் ஆகிய செயல்களுக்கு அடுத்துவரும் மறைத்தல் செயலால் ஈசன் தன்னுள்ளே அவை யாவும் ஒடுங்கும்படி செய்தலைத் திரோதானம் என்னலாம்; இதை நடராஜனின் ஊன்றிய கால் குறிக்கும். அதன் பிறகு, எல்லாவற்றிற்கும் மேலான செயலாக, அருளுதல் தொழிலை(வலத்திலுள்ள அபயகரத்தால்) செய்கிறான். அதன் முக்கிய நோக்கம், தங்கள் ஜீவித காலத்தில் ஈசனை நினைந்தோருக்கு மட்டுமன்றி அல்லாதார்க்கும் அவனை நினைப்பதற்கும் அதன் வழியே மாயை என்னும் கட்டினின்று விலகவும் மீண்டுமொரு வாய்ப்பைக் கொடுத்தல் ஆகும். எனவே, அழித்தலைத் தனது இடது கரத்தாலும் அருளுதலை வலது கரத்தாலும் செய்து சமத்துவத்தைக் காட்டும் இறைவன், இவற்றிற்கிடையே மறைத்தல் தொழிலைச் செய்து அடுத்து (எல்லா மனிதர்க்கும் மற்றுமுள்ள ஜீவராசிகளுக்கும்)அருள்வதற்காக “ஒற்றைக்காலில்” நிற்கிறான் என்று பொருள் கொள்ளலாமெனப் படுகிறது.

அனந்த் 27-11-2012


இது செய்வையோ? - October 27 2012

திருச்சிற்றம்பலம் 

<> இது செய்வையோ? <>
 

போக்கற்று நிற்குமெனைப் பரிவோ(டு) உசாவியுன்
... பொற்பதம் காட்டி உன்னை 

வாக்கிட்டுப் பாவியற்றும் வகையையும் கூட்டியுன்
... வடிவினைப் பாடு மாறு 

நாக்கிற்றேன் ஊட்டிப்பின் நாளும்நீ ஆடிடும்
.. நாட்டியம் காண வைப்பின் 

மூர்க்கர்க்கும் அருள்செய்யும் மூர்த்திநீ என்றுபார்
.. மொழிந்துனைப் போற்று மன்றே?
 

நாவிற்றேன் ஊட்டி – நாவில் தேன் ஊட்டி;

மூர்க்கர்= கீழ்மக்கள்,இழிஞர்


பாடல் பொருள் கீழே:

ஐயனே!

நல்வழி எதுவென்று அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை
நீ கவனித்து,
பரிவுடன் என் குறை என்னவெனக் கேட்டு (உசாவி),
இங்கே பார் என்னுமாறு உன் பொன்னான திருவடிகளைக் காட்டி,
உன்மேல் நல்ல சொற்கள் கொண்ட பாடல்களை இயற்றும் விதத்தையும் எனக்குக் கைகூடவைத்து,
அதன் பின் உன் திருமேனி அழகைக் கூறும் பாடல்களை இசையோடு பாடுவதற்காக எனது நாவில் தேனை ஊட்டிப் பாடவும் வைத்து (அதனால் உன் உளம் மகிழ்ந்து)
எனக்கு நீ அனவரதமும் (புறத்தே தில்லையிலும் அகத்தே என் நெஞ்சுள்ளும்) ஆடும் திருநடனத்தைக் காண வைத்துவிடு.

(ஏன் நீ இவ்வாறெல்லாம் வேண்டுமென்று கேட்பாயானால்)

அப்படி நீ செய்தால்தான் என்போல் இழிந்த நிலையில் உள்ளவர்களுடைய குற்றங்களை அறிந்தும் அவர்மேல் சினம் கொள்ளாது, அதற்கு மாறாக, உனது திருவருளை அவர்களுக்கு நல்கும் இறைவன் என்று உலகத்திலுள்ளோர்களிடமிருந்து உனக்குப் புகழ்மொழி கிட்டும்

(எனவே கீழ்ப்பட்டவனான எனக்கும் உன் அருளைத் தருவாயாக).

உணர்ந்தோர் அவரே - October 13 2012

திருச்சிற்றம்பலம் 

<> உணர்ந்தோர் அவரே <>



இல்லாத ஒன்றினைய(து) உள்ள தென்றும்
.. இருக்கின்ற ஓர்பொருளை இல்லை யென்றும்

நில்லாத உலகில்நமை மயங்கச் செய்து
.. நிரையாகப் பிறவிகளை எடுக்க வைக்கும்

பொல்லாத சாலமொன்றைப் புரிவாய் உன்னைப்
.. புரிந்தோர்கள் புறக்கண்ணால் உலகில் காணும்

எல்லாமும் அனுபவிப்பார் இன்பம் துய்ப்பார்
.. எனினுமவை மாயையென உணர்வார் தாமே.

ாப்பு: எண்சீர்; அரையடி வாய்பாடு: தேமாங்காய் காய் மா தேமா

அனந்த் 13-10-2012 

=====================
ின்னூட்டங்கள்:



இனிய பாடல்.


சம்பந்தர் தேவாரம் ஒன்றை ஞாபகப்படுத்தியது.


சம்பந்தர் தேவாரம் - 1.28.1

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமா னொளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
சிவசிவா (வி. சுப்பிரமணியன்)

நன்றி.

கறையற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
.. காண்பதுவுங் கேட்பதுவும் எவையு மில்லை
நிறைவுற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
.. நினைப்பதுவும் நினையாதும் எவையு மில்லை
மறைவற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
.. மற்றவெலாம் ஒருகாலும் இலவே இல்லை
குறைவற்ற அப்பிரமம் நானே என்று
.. கோதறவே எப்போதும் தியானஞ் செய்வாய்
ரிபுகீதை, 18-13
... அனந்த்

……………
துய்த்திடும் யாவுமே பொய்த்திடு மென்பதைப்
புரிந்தவர் சொல்லிடக் கேட்டிட லின்பம்

கைத்தல மிருந்திடும் கனியினை யறிந்தே
கண்டிடும் மாயையை விடுத்திட லின்பம்

மெய்க்கொரு பொருளாம் மகேசன் தாளிணை
யாண்டும் பற்றியான் கிடந்திட லின்பம்

தைத்திடும் வகையிற் பைந்தமிழ்ப் பாவால்
உரைத்திடு மன்பரை வணங்குத லின்பமே!

சங்கர் குமார்