Sunday, September 21, 2014

நீயும் நானும்


இன்று பிரதோஷ நன்னாள்


திருச்சிற்றம்பலம்


<> நீயும் நானும் <>


நரையுடை யேன்நான் நீயோ

... நரைவெண் விடையுடையாய் 



திரையுடை யேன்நான் நீயோ

...திரைபாய்   புனலுடையாய்



வரையுடை யேன்நான் நீயோ

...வரையில் உறைவுடையாய்



நிரைநிரை யாய்நான் நின்றன்

...நேரென் றுரைத்திடுமே!



(திரை = தோல் சுருக்கம், அலை; வரை= அளவு, மலை; ; நிரை=வரிசை)    



அனந்த் 21-9-2014

---------------------------

கீழே காணும் பாடல்கள் நான் அண்மையில் இதய சிகிச்சைக்காக மருத்துவ மனையில் இருந்தபோது மனத்தில் எழுந்தவை:

                     <> விந்தை புரிந்தாய்! <>

           தில்லைத் தலத்தினைக் கண்டவ னைஇன்று 
           தில்லியம்* தன்னையும் காணவைத்தாய் - உன்றன்
           எல்லைஇல் லாத கருணையி னாலங்(கு) 
           இருந்திட்ட காலம்கு றைத்துவைத்தாய்!

           கல்லைக் கனியாக்கும் விந்தையி னைஇந்தப்
           புல்லியன் கண்முன்நி கழ்த்திவைத்தாய் – யாரும்
           ஒல்ல இயலாதவோர் காரியத் தைநீயோ
           ஒல்லை புரிந்தென்னைக் காத்துவிட்டாய்!

           தொல்லை இனியெனக் கேதுமில் லைஆயின்
           தொல்லை உனக்குண்(டு)அ(து) என்னவென்றால் - நான்
           அல்லும் பகலும்என் நெஞ்சத்தி லேஉன்னை
           அடைத்துவைத் தேயங்கே ஆடவைப்பேன்!
    
(*தில்லியம் = ட்ரில்லியம் (Trillium) என்ற பெயர்கொண்ட டொராண்டோ மருத்துவ மனை; ஒல்லுதல் = ஆற்றுதல், இயலுதல்; ஒல்லை = விரைவு, காலந்தாழ்த்தாமை).
                   -------------------------------------------------

                  <> இதயநலம் காப்பாய் <>


        பதுமத்தில் அமர்ந்திருந்து படைத்திடுவான் வாணிபதி

        மெதுஅரவின் மேலுறங்கிக் காத்திடுவான் பூமகளோன்

        இதுமாந்தர் கண்(டு)இயங்கா(து) இராவண்ணம் களிநடனம்

        பொதுநடுவில் ஆடிஎன்றும் புரப்பைஎம(து) இதயநலம்!

        (புரப்பை  = புரப்பாய், காத்திடுவாய்; இதயநலம் = cardiac health) 
           

Saturday, September 6, 2014

இதயத்துள் இருப்போன்

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


​ 
<> இதயத்துள் இருப்போன் <>


இதயத் துள்ளே இருந்ததனை
.. இயக்கும் கூத்தா! உன்மகிமைக்  

கதையை அன்றி வேறெதுவும்
.. கருதா வண்ணம் அதனைக்காத்(து) 

உதயத் தெழுமோர் கதிரவனாய்
.. உன்றன் ஒளியால் விளக்கிஅதை   

எதையும் தாங்கும் திறம்படைத்தே  
.. இருக்கத் துணைசெய் தருளுவையே!

அனந்த் 
6-9-2014