Wednesday, July 23, 2014

உன் விளையாடல்


இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்



<> உன் விளையாடல் <>

என்னுள்ளே குடிபுகுந்து நீஎன்னை இயக்கிவைப்பாய்
... இதனைநான் உணராமல் இருந்திடவும் செய்திடுவாய்

முன்னைநாள் நல்வினைகள் முந்திவரும் அத்தருணம்
... முகம்காட்டி, உடன்மறைவாய்; முயன்றுன்னைத் தேடுகையில்

நன்னெறிக்கு வழிகாட்ட நல்லோரின் துணையளித்து
... நடமொன்றென் நெஞ்சகத்தில் நடப்பதைநான் காணவைப்பாய்

பின்னரொரு திரையின்பின் ஒளிந்தென்னை அழவைப்பாய்
... பெரும்பற்றப் புலியூரா! போதும்விளை யாடல்ஐயே!

... அனந்த்
23-7-2014

Thursday, July 10, 2014

வழி காட்டுவயோ?


இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம் 


<> வழி காட்டுவயோ? <> 

தடவித் தடவி வழிதேடிச்
.. சளைத்த குருடன் போலுன்னை

அடையும் வழியைத் தேடுகிறேன்
.. அதனைக் கண்டும் மூன்றுவிழி

உடையோய்! வாளா திருப்பாயோ?
.. உனக்கோர் பார்வைக் குறையுண்டோ?

நடனம் புரிவோய்! நான்மாயும்
.. நாளும் வருமுன் அருளாயோ? 

அனந்த்
10-7-2014