Friday, June 7, 2013

காத்திருப்பேன்

திருச்சிற்றம்பலம்
 
<> காத்திருப்பேன் <>
Inline image 1

சின்னவோர் புழுவினும் சிறியபுல் லறிவுடைத் தீயனேன் எனத்தெ ரிந்தும்
.. திருவருட் கடலெழும் திவலையென் மேல்படத் திருவுளம் கொண்ட தென்னே?

உன்னையே சதமென உன்னிநன் மலர்களால் உவப்பொடு பூசை செய்யும்
.. உத்தமர் குழுவினர் தரிசனம் ஒருமுறை செய்தததால் எய்த பேறோ?

என்னையும் அவர்தமுள் எளியதோர் இடத்திலே ஈச!நீ கூட்டி வைப்பாய்
.. என்னுமோர் கனவுடன் எத்தனை சனனமும் ஏழைநான் காத்தி ருப்பேன்

சென்னியில் பிறைமதி சேர்த்தவா! சிறியனின் நிலையினை நினைவுறுத்தச்
... சீவர்கள் குறையெலாம் தீர்க்குமென் அன்னையின் துணையையும் நாடல் நன்றே.

.. அனந்த் 7-6-2013

யாப்பு: பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்; 1,8 சீர் மோனை.

==================================
Comments

>> .. திருவருட் கடலெழும் திவலையென் மேல்பட

அருமை!

>> உன்னையே சதமென உன்னி

பட்டினத்தாரை நினைவுபடுத்தியது.

“ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்தாள் சதம்கச்சி ஏகம்பனே.”

நன்றி. அர்விந்த்
--------------
பாடலின் ஈற்றடியில் அன்னையையும் இணைத்ததற்கானச் சிறப்புக்காரணம் ஏதேனும் உள்ளதா?
சந்தர் சுப்பிரமணியன்

அவனே அன்னையைத் தன்னோடு இணைத்திருப்பவன் தானே! :-)
சிறப்புக் காரணம் என்றேதுமில்லை. ஒருவேளை காலப்போக்கில் அவன் என் நிலையை மறந்துவிடுவானோ என்ற  அச்சத்தால், சேயின் நிலையை என்றும் நினைவில் கொண்டிப்பவளான அன்னையைப் பற்றி குறிப்பிடத் தோன்றியது.  

நன்றி,
அனந்த்