Wednesday, May 22, 2013

கூத்தாடும் ஐயன்

இன்று (22-5-2013) பிரதோஷ நன்னாள்


திருச்சிற்றம்பலம்

Inline image 1

<>  கூத்தாடும் ஐயன் <>

கூத்தாடும் ஐயன்பேர் சொல்வோம்  -  அவன்
.........அடியவ ரோடே
கூடிமெய்ப் பாதையில் செல்வோம் - அவர்
.........துணையுடன் நம்மைக்  
கூடும்வல் வினையெல்லாம் வெல்வோம்                             1

ஆத்தாளை அங்கமாய்க் கொண்டான் - அவள்
..........கருணையி னாலே
ஆலம் அமுதென உண்டான் - அவன்
..........வடிவினை இங்கே
ஆர்தாம் முழுதுமாய்க் கண்டார்?                                               2

தாத்தைஎன் றாடுவான் தில்லைஅவன்
..........தாள்பணி வோர்தமைச்
சாராது ஊழ்தரும் தொல்லை. – அவர்
..........செல்லும் வழிக்கினிச்
சதிராடும் மன்றமே எல்லை.                       3

வார்த்தைக் டங்கா ஆட்டந்தான்– அதை 
..........மாந்திட ஆங்கே
வருமாம் அடியார் கூட்டந்தான் - நடம்       
..........கண்ட அவர்க்கு
வருமோவே றெதிலும் நாட்டந்தான்?               4

கூத்தாடும் ஐயன்சொல் வேதம்  -  அவன்
..........குரைகழல் நாதம்
கூட்டும்ஓங் காரமாம் கீதம் – அதில்
..........கூடியே காண்போம்
கூறும் தரமில்லா போதம்.                         5

அனந்த் 22-5-2013
(போதம் = மெய்ஞ்ஞானம்)

யாப்பு: காவடிச்சிந்து வகை (இயைபு எதுகை, முடுகு)

முகப்பு ஓவியம்: சு. ரவி (நன்றியுடன்)
ஒலிப்பதிவு. ராகமாலிகை (ஆனந்தபைரவி, கமாஸ், ஷண்முகப்ரியா, சுருட்டி இராகங்கள்) தாளம்: ஆதி. 
http://raretfm.mayyam.com/ananth/kooththAdum.mp3

   

Monday, May 6, 2013

<> எல்லாம் ஆனவன் <>

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.



Inline image 1

திருச்சிற்றம்பலம்

<> எல்லாம் ஆனவன் <>

விண்ணூரும் விடையான்என்
எண்ணூரும் இறையோன்முக்
கண்ணாரும் கடவுள்நற்
பண்ணாரும் பதியானே      1
       
பதியாவான் பத்தர்க்குக்
கதியாவான் கருணைபாய்
நதியாவான் நல்லோர்வாய்த்
துதியாவான் தூயவனே      2


தூயவனாம் தொழுவோர்க்குத்
தாயவனாம் சாருமுளம்
மேயவனாம் மறையறியா
மாயவனாம் வரையோனே   3


வரைதனை அசைத்தோனைத்
தரைமிசை அடர்த்தோனோர்
நரைவிடை நயந்தோன்பூ
விரைகமழ் கழலோனே      4


கழலடி துணையென்று
விழுபவர் துயர்தீர்ப்போன்
அழலொரு விழிகொண்ட
பழையதொர் பரமாமே.      5


பரந்ததொர் சடையான்நல்
உரந்திகழ் விடையான்மான்
கரந்தனில் உடையான்இல்
இரந்துணும் இறையாமே     6


இறைஞ்சிடும் அடியார்க்குக்
குறைந்திடா தருள்வோன்உள்
மறைந்தென துணர்வாக
நிறைந்துள குருநாதன்.      7


நாதமே உருவானோன்
வேதமுட் கருவானோன்
காதலோ டவன்நாமம்
ஓதுவோர் வினைதீர்ப்பான்    8


தீர்த்தமும் மதிபாதி
சேர்த்தமா முடியோன்ஓர்
வார்த்தையும் உரையாத
மூர்த்தியாம் குருவாவான்    9


ஆவினைந் துகந்தேற்பான்
காவென அடியார்கள்
கூவிடின் வருவானென்
பாவினுள் உறைவோனே.    10


(பாடல் 1. எண் = எண்ணம், மனம்; ஆர்தல்= அடைதல், பெறுதல், அனுபவித்தல், அணிதல். பாடல் 4. விரை = மணம், மலர், கலவைச் சாந்து)
யாப்பு: வஞ்சித்துறை அந்தாதி.


... அனந்த் 6-5-2013