Friday, September 21, 2018

சரியாமோ?

  
                 திருச்சிற்றம்பலம் 

         
            
                 <> சரியாமோ? <>
தங்கத் தலமும்தவறா துணவும் தந்துஉம் தேவை எல்லாமும்
… தானே பார்த்துத் தரவோர் மங்கை உம்மோ டொட்டி இருக்கையிலே

அங்கும் இங்கும் ஆனொன் றேறி அலைந்(து)ஊர் ஊராய் நாடோறும்
… அன்னம் தேடி இரந்தே உண்ண ஆசை நீர்தாம் கொண்டீரேல்

இங்(கு)உம் அருளால் இல்லம் நடத்தி இறைஉம் நினைவில் அகலாமல்
… இருக்கும் அடியார்க் கீவ தற்(கு)உம் பாலே துண்டென் றறியேன்யான்

சங்கம் முழங்கத் தாரை ஒலிக்கத் தாத்தை என்றே நடமாடும்
… சத்தத் தினிலென் சந்தே கத்தை மறக்கச் செய்தல் சரியாமோ?

(*பார்வதியம்மை தான் வசித்துவந்த இமயமலையில் தன் கணவரும் வசிக்குமாறு ஏற்பாடு செய்ததாகத் தற்குறிப்பேற்றம். 14-சீர் ஆசிரிய விருத்தம்; அரையடி: தேமா+ 5 மா + காய்.)
அனந்த் 22-9-2018 சனி மஹாப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


Thursday, September 6, 2018

விளையாடல் ஆமோ?

              திருச்சிற்றம்பலம்
      <> விளையாடல் ஆமோ? <>    


ஈதென்ன விளையாட்டுஈசனுன்னைப் பூசைசெய்ய
.. இயலாமல் ஆக்குவதில் என்னசுகம் கண்டனையோ?
போதொடு*நான் நீர்சுமந்து புலர்காலை வேளையிலே
.. பூரணன்உன் மேனியிலே பொழிவனென நினைக்கையிலே
மாதொருத்தி நீரைஉன்மேல் மாரியெனப் பெயக்காண்பேன்
.. மணங்கமழும் பன்னீரும் மற்றுமபி டேகத்திற்(கு)
ஏதுவெனச் சேகரித்த இளநீரும் சந்தனமும்
... ஏற்பதற்குன் நெஞ்சமினி இடம்தருமோ கூறுவையே?

காவொன்றில் நான்புகுந்து கனகசபை ஐயனுன்றன்
… காலடியில் இடுவதற்கென் கைகொண்டு நன்கலர்ந்த
பூவெடுத்துப் பூசைசெய்யப் போகையிலப் *போதிலுன்றன்
.. பூமுகத்தைக் கண்டென்றன் பொறியியங்க மறுக்கவைப்பாய்**
தேவேநான் உன்றனுக்குச் சேவைசெய்ய வழியொன்றைத்
… தேடுவதில் நாளெல்லாம் செலவழிப்பேன் இறுதியிலென்
நாவெடுத்துன் நாமத்தை நவிலவுமென் நாக்குழறும்
… நானிங்ஙன் தவிப்பதுமுன் நடிப்பிலொரு கூறாமோ?
*போது = பொழுது; அரும்பு மலர்; ** திரு. தாயுமானவ அடிகளாரின் “பண்ணேன் உனக்கான பூசை..” எனத் தொடங்கும் பாடலை நினைவு கூர்க.)

..அனந்த் 7-9-2018  (பிரதோஷ நன்னாள்)