Saturday, October 24, 2015

காணிக்கை

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்



<> காணிக்கை <>

(14-சீர் விருத்தம். அரையடி வாய்பாடு: தேமா காய் காய் விளம் விளம் மா மா காய் காய் காய் விளம் விளம் மா மா)


மூப்பே இல்லாத காலன்தன் கடமையை
... முற்றிலும் ஆற்றி எனக்கு
..... முதுமைநிலை தந்தெனது வசமுள்ள யாவையும்
........ மொத்தமாய்ப் பறித்த பிறகு

தோப்பாய் இருந்தவனோர் தனிமரமாய் ஆனபின்
... சொந்தமென்(று) இயம்ப என்னைத்
.... தொத்தியுள நோயோடு தொல்லைவிளை மனம்இவை
..... தொடருமிந் நிலையில், அரனே!

காப்பாய் எனஉன்றன் கழல்நீழல் வந்துளேன்
..... கடையனின் காணிக் கையாய்க்
......கைவசம்என் னிடமுள்ள  அகந்தையினைத் தருகிறேன்
..... கருணைகூர்ந் தேற்பை யானால்

பார்ப்போர் பாவியையும் பாலிக்கும் உன்னருட்     
....பாங்கினைப் போற்று வாரே
.... பத்தியுடன் எறிந்தவொரு கல்லினையும் பூவெனப்
....  பரிவுடன் ஏற்ற பரமே! 


.. அனந்த் 25-10-2015

Saturday, October 10, 2015

உதவிடுவாய்

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு  நன்னாள்.
திருச்சிற்றம்பலம்



              











<>  உதவிடுவாய் <>

(கட்டளைக் கலித்துறை)

வெள்ளை மனத்துடன் மேதினி தன்னில் விழுந்தபினர்
மெள்ள அதனுள் விடமென ஆசை விரிந்துலகம்
எள்ளும் வகையினில்  இன்றா கினன்யான் ஈச!உனை
உள்ள வழியொன்(று) உரைத்திடின் உய்வேன் உதவுவையே !

கொடுத்தாய் குறைஇலாத் தேகமும் வாழ்வும் கொடியனதைக்
கெடுத்தேன் எனினும் குணம்மிகு நல்லோர் குழுநடுவில்
விடுத்தாய் அதனையும் வீணடித் தேன்இனி மேலுமெனைத்
தடுத்தாட் கொளவோர் வகைதெரி யாமல் தவித்தனையே !

பொய்யே துணையெனக் கொண்டவிப் பாவி புனிதனுனை
ஐயே! எனவே அழைத்திடும் அந்த அருகதையை
மெய்யாய் அடைய விளங்குபொன் அம்பல மேடையிலுன்
ஒய்யா ரநடத்  துளபொருள் செப்பி உதவுவையே.

..அனந்த்
10-10-2015