Monday, January 27, 2014

தில்லைத் தரிசனம் <>


திருச்சிற்றம்பலம்

Inline image 2



<> தில்லைத் தரிசனம் <>



தில்லைத் தலத்தினைச் சேரும் வெறியுடன்

.. சென்மம் முழுவதுங் காத்திருந்தேன் -அங்கே

எல்லையில் லாததோர் இன்பவெளியினில்

.. ஈசன் நடமாடக் கேட்டிருந்தேன்            1



தொல்லை தரும்பவ நோயோர் நொடியில்

.. தொலையுமங் கேயெனச் சொன்னதனால்- என்னுள்

அல்லும் பகலும்அச் சேத்திரத்தைக் காணும்

.. ஆவல் எனைஉந்த முன்பெயர்ந்தேன் 2



ஓரடி முன்னம் எடுத்துநான் வைக்குமுன்

.. ஓடியங் கேஐவர் வந்தனரே

தேரடி சிக்கிய சிற்றெரும் பாக்கியென்

.. சித்தம் சிதைக்க முனைந்தனரே             3



நாட்டமுடன் அந்த நட்டம் பயின்றிடும்

.. நாதனைக் காணஎன் உள்ளத்திலே

கூட்டி வைத்த என்றன் ஆசையெல்லாம் - அவர்

.. குப்பையில் கொட்டத் துணிந்தனரே  4



வாட்டியென் னையவர் பாதையிலே காலை

..வைக்கப் பணித்திட்ட வேளையிலே

கூட்டிக்கை கும்பிட்டுக் கோனைத் துணைசெய்யக்

..கூப்பிட நெஞ்சம் மறந்ததுவே         5



முன்னைப் பிறவியின் புண்ணியமோ இல்லை

.. முந்தையர் நல்வினைத் திண்ணியமோ - ஒரு

மின்னலைப் போலொரு வெள்ளை விடையொன்று

..விண்ணி லிருந்து விரையக் கண்டேன்   6



அன்னை ஒருபால் அமர்ந்திருக்க அந்த

.. ஐயன் முகத்தில் முறுவலுடன் - அழும்

என்னை விளித்தென்றன் பக்கம் நெருங்கிடல்

...என்றன் பகைவர்கள் பார்த்தனரே           7



ஆதவன் முன்னே அகலும் பனிபோல

.. ஐவரும் தேய்ந்து மறைந்தனரே - என்றன்

காதல் கனவு பலித்திட வேண்டிநான்
 
...
கைகளைக் கூப்பித் தொழுதுநிற்கத்   8



தத்திமித் தாவென்ற தாள லயத்தினில்

...
சங்கரி யோடந்த சாம்பவனும்
நர்த்தனம் ஆடிடும் தில்லைத் தரிசனம்
...நான்காண வைத்தனன் நாயகனே.    9 


காணக்கா ணவென்றன் நெஞ்சுள் நிறைந்த

...களிப்பினில் நான்என(து) என்றுநிதம்

பேணிவந் தஎன்றன் பித்தமெல் லாம்அந்தப்

...பெம்மான் சிரிப்பில் தெளிந்ததுவே.    10




.. அனந்த்

27-1-2014 (சிதம்பரத் திருத்தலத்திலிருந்து, சோமவாரப் பிரதோஷம்)

Tuesday, January 14, 2014

பாட அருள்வாய்



திருச்சிற்றம்பலம்  


<> பாட அருள்வாய் <>


சல(ம்)மீதெ ழுந்து சிறிதே இருந்து
...சடிதேம றைந்த குமிழ்போல
... சகவாழ்வை என்று முளதாய் நினைந்து
....... சதிகார ரென்று தெரியாமல்

புலனைவர் பின்னர் பொழுதே அலைந்து
... பொதியாக மூளும் வினைசேர்த்துப்
.... பொடியாக மண்ணில் ஒருநாள் விழுந்து
..... புதிதாய்ப்பி றந்து சுழலாமல்

அலைமோது கங்கை மதியோடு  நாகம்
... அணியீசன் நான்கு மறைதேடி
...... அறியாத ஆதி இறையோனை நாடி
........ அனுபூதி பெற்ற அடியார்கள்

உலகோரும் அங்ஙன் உயுமாறு  இரங்கி
....உமைபாகன் மீது பலவாக
... உரைபாடல் தம்மில் ஒருபாட லேனும்
.....உணர்வோடு பாடி உருகேனோ?

 
அனந்த் 14-1-2014