Tuesday, April 16, 2019

மயக்கறுப்பாய்



              திருச்சிற்றம்பலம்

            <> மயக்கறுப்பாய் <>

வயதைக் கொடுத்தாய் வலியைக் கொடுத்தாய்
.. வாடும் உடலின் வலுவைக் குறைத்தாய்

பயத்தில் வாழும் பரிசைக் கொடுத்தாய்
.. பாரோர் இகழும் நிலையைக் கொடுத்தாய்

கயிற்றில் பாம்பைக் காணும் வரைஇக்
.. கட்டம் மெய்போல் காணும் உன்றன்

வயத்தே என்னை வரவ ழைத்திம்
.. மயக்கம் தீரும் மருந்(து) யாயோ?

(குறிப்புஇருளில், கயிறு ஒன்றைப் பாம்பெனக் கருதி அஞ்சுவதைப் போல்பொய்த் தோற்றமான இவ்வுலகத்தில் நாம் அனுபவிக்கும் இடர்களை உண்மையெனவும் அவை இறைவனால் கருணையின்றி நமக்குத் தரப்பட்டவை எனவும் எண்ணுதல்கட்டம் – கஷ்டம்.)

                       * * * * *

கண்மங்கிப் போனாலும் கனகசபை நாத!மனக்

கண்மங்கா தென்னைநீ  காப்பாயேல்  - ஒண்கதிரும்

தண்மதிதீ முக்கண்ணாய்த் தாங்கிடுவோய்உன்நடத்தை

உண்மகிழக் காண்பேன் உவந்து.           

(நடத்தை = நடனத்தை)

அனந்த் 16-4-2019 (வட அமெரிக்காவில் இன்று பிரதோஷம்) 

Monday, April 1, 2019

அட்டிலா அருள்


திருச்சிற்றம்பலம்


                                           <> அட்டிலா அருள் <>

வருந்திநான் வாவென அழைத்திடும் வேளையில் ந்திடா(து) ஏகு வாய்நீ
…. மறந்துபின் உன்நினை வற்றுநான் இருக்கையில் வாசலில் வந்து நிற்பாய்!

அருந்திடப் பானம்நான் அளித்திட வருகையில் ஆங்கிருந்(து) அகன்று செல்வாய்
ஐயகோ! என்றுநான் அலமரும் போதினில் அருகில்வந் ததனை ஏற்பாய்!

மருந்தள வேனுமோர் புண்ணியம் செய்திடா வறியனேன் தனக்கும் உன்றன்
மனத்தினில் ஓரிடம் தந்துள(து) அறிந்துநான் எனதுதீக் குணத்தை விட்டுத்

திருந்திட  முயன்றென(து) அகத்தினில் தேவ!நீ அகன்றிடா(து) இருக்க வைப்பேன்
தீப்பிழம்(பு) ஆனஓர் சோதியின் உருவமாய்த் திகழ்அரு ணாச லத்தோய்!


(14-சீர் ஆசிரிய விருத்தம்)

... அனந்த் 2-4-2019, பிரதோஷ நன்னாள்