Thursday, January 24, 2013

கழலிணை காட்டிடுவாய்


திருச்சிற்றம்பலம்
 
Inline image 1
<> கழலிணை காட்டிடுவாய் <>

 
 
விதியொன்றும் அறியாமல் வாழ்க்கையெனும் படகோட்டும்
.. விளையாட்டில் நான்இறங்கி விட்டமறு கண(ம்)முதலாய்

அதிவேக நதியதனுள் சதிசெய்யும் சுழல்களுடன்
.. அரைநொடியில் என்ஓடம் அமிழும்நிலை கண்(டு)என்றன்

உதிரமெலாம் உறைந்துவிட உள்ளமெலாம் நடுநடுங்க
.. ஒருவழியும் இல்லாமல் உயிருடல்விட்(டு) ஓடுமுன்னம்

கதியெனஇவ் வேழைமுன்நின் கழலிணைகள் காட்டியெனைக்
.. காத்திடுவாய், காத்திடுவாய், கயிலைமலை வாழ்இறையே!

(யாப்பு: எண்சீர் ஆசிரிய விருத்தம். 8-காய்ச்சீர்)

அனந்த் 24-1-2013

Tuesday, January 8, 2013

8-1-2013 கயிலைக் காட்சி

இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்  
         





<கயிலைக் காட்சி <>

அன்னையின் மடியிலே அமர்ந்திடும் முருகனை அன்புடன் நோக்கி நீயும்
.. அறுமுகா! வாவென அழைத்திட அவனுனை அணுகிமேல் அணைக்க, முத்து

மின்னிடும் மூவிரு முடிகளை மோந்துநீ முத்தமிட் டுவகை பொங்க,
.. ”விழிவழி வந்தஎன் மைந்த!நீ வாழ்க”வென் றுரைத்திடல் கேட்(டு) அவன்றன்

முன்னவன் வேகமாய் முந்திவந் துன்மடி மேலமர் வாகு கண்டு
.. முறுவல்செய் அன்னையின் முகத்தொளிர் அழகிலே மூவரும் மயங்கி நிற்கும்


இன்னதோர் காட்சியென் இதயமாம் குகையினில் என்றுமே நிலைக்க வைப்பாய்

.. ஈசனே! ஏழையும் இமகிரி ஏறுமா(று) இன்னருள் செய்த கோவே!


வாகு= இங்கு, சாமர்த்தியம்; மேலும்: அழகு, ஒழுங்கு
முதல் நான்கு அடிகள் ஆதிசங்கரர் அருளிய ”ஸுப்ரம்மண்ய புஜங்கம்” 

என்னும் துதியில் உள்ள (இஹாயாஹி, ஸுதாங்கோத்பவ என்று தொடங்கும்) 

இரு கண்ணிகளை அடிப்படையாகக் கொண்டவை.
யாப்பு: பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்; 1,3,8,10 சீர் மோனை

ஒலிப்பதிவு: http://raretfm.mayyam.com/ananth/Kayilaik_kAtchi.mp3


..அனந்த் 8-1-2013