Friday, August 22, 2014

என் மகிழ்ச்சி


திருச்சிற்றம்பலம்





<> என் மகிழ்ச்சி <>

மலையு முண்டு பனியு முண்டு மங்கை உடலில் பாதி உண்டு
... மகிமை வாய்ந்த மைந்தர் உண்டொர்   அணியாகக்

கலைகு றைந்த மதியு முண்டு கங்கை தலையில் அலைவ துண்டு  
.. கணங்கள் உண்டு படையு முண்டிங்(கு)  இவையோடு      

தலைகள் ஐந்து தாமு முண்டு தாவி ஏற விடையு முண்டு
.. சததம் ஆடச்  சதிரு முண்(டு)இவ்    விதமான

நிலையில் இந்த நீசன் பாலும் நேச முண்டி வர்க்(கு)என் றெண்ணி   
.. நிதமும் அந்த நினைவில் நீந்தி         மகிழ்வேனே.

(சததம்= எப்பொழுதும்; சதிர் = நாட்டிய சபை; பதின்மூன்று சீர் ஆசிரிய விருத்தம், வாய்பாடு: 1, 9 சீர்கள் புளிமா, மற்றவை மாச்சீர், இறுதிச்சீர் புளிமாங்காய்; )

அனந்த் 22-8-2014

Friday, August 8, 2014

நாடி வந்தேன்

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 





                          <> நாடி வந்தேன் <>

ஆசையொடு கோபமும் அகந்தையும் மோகமும் ஆனதோர் அசுரர் கூட்டம்
.. அறிவெனும் தீயிடை அழிவெனும் சிதையிலே எரிந்துவெண் சாம்ப ராகி

நாசமுறு வண்ணமாய் நாத!நின் நாமமென் நாவிலே நிலைக்க அருள்வாய்
.. நாதமாய் விந்துவாய் நாடுபல் உருவமாய் நானிலம் விண்ணு மாகி

ஈசனென இலங்குமுன் ஏற்றமிவ் வேழையேன் அறிகிலேன் ஆயி னும்நீ
.. எளியனாய் நின்னடி ஏத்துவோர்க்(கு) இரங்கிடும் இயல்பினன் என்று போற்றும்

நேசர்பலர் சொல்லைநான் நிசமென நம்பிநின் நீள்கழல் நாடி வந்தேன்
.. நிலவொடு தண்புனல் நிலவிடும் சடைய!பொன் அம்பலத் தாடு வோனே.  
    
..அனந்த்  8-8-2014
(பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
வாய்பாடு: கூவிளங்காய் விளம் விளம் விளம் விளம் மா மா
விளம் விளம் விளம் விளம் விளம் மா மா)