Thursday, June 16, 2016

உய்யச் செய்வாய்

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


<> உய்யச் செய்வாய் <>

செய்குவன் பிழைகள் கோடி சிறிதுமோர் தயக்க மின்றிப்
பெய்குவன் சுடுசொல் என்னைப் பேணுவோர் மேலும்;  இன்று
கைகுவித் துன்முன் வந்து கதறினேன் கனிந்து நோக்கின்
உய்குவன் உடன்என் அத்தாஉயர்திருத் தில்லை யானே!

வழியிதுஎன்(று) அறியேன் மற்ற மனிதர்தம் துணையும் நாடேன்
குழியினில் வீழ்வேன் காக்கக் கூப்பிடேன் வெளியார் தம்மைப்
பழியெலாம் பிறர்மேல் வைப்பேன் பரமனே! உன்பேர் சொல்லி
விழிபுனல் சோர வந்தேன் விலக்கிடா தருள்செய் வாயே

திண்ணிய நெஞ்சில் ஈரத் திவலையும் இல்லா(து) என்றும்
எண்ணுவேன் என்னை மட்டும் இம்மியும் பிறர்க்கொன்(று) ஈயேன்
பண்ணுமென் செயல்கள் யாவும் பாபமென் றுணர்ந்தின்(றுஉன்னை
நண்ணினேன் நாதா! என்னை நல்லவன் ஆக்கி டாயோ?

உனக்குள பெருமை மேன்மை ஒன்றுமே  அறிந்தி லேனாய்
எனக்கென மட்டும் வாழ்ந்தேன்  ஈனனென்(று) உணரா(து) இன்று
கனக்குமென் அகந்தை யாலே கண்டபல் துன்பந் தாங்கா(து)
அனற்கரம் கொண்டோய்! உன்னை அணுகினேன் காத்தி டாயோ?

காப்பதில் உன்னை விஞ்சும் கடவுளர் இலரென்(று) உன்றன்
பூப்பதம் சேர்ந்தோர் சொல்லைப் புத்தியில் இருத்தி நானோர்
பாப்புனைந்(து) இன்று வந்தேன் பார்த்தருள் புரிவாய் தேகம்
தீப்புகும் முன்னம் உன்றன் திருவருள் தீண்ட  வைப்பாய்.


.. அனந்த் 17-6-2016  

Wednesday, June 1, 2016

அரியும் அரனும் அவன்

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

 

<> அரியும் அரனும் அவன் <>


அரியான் அவனை அறியான் பவத்தை

அரியான் அரியான் அறியான் – அறைவேன்

அரியான் அலன்றன் அடியார்க்(கு) அவரைப்

பிரியான் பெரியான் அவன்.


சிவன்:

எளிதில் எட்டிட இயலாதவன்*; அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான்** (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)  திருமாலும் அறியாதவன் (இது சோதிப் பிழம்பாய் நின்ற சிவனின் அடியைத் திருமால் காண இயலாததைச் சுட்டும்.) எனினும், அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் அல்லன், எளியனாவன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் நான் கூறுவேன்.
* அரியானை அந்தணர்தம் சிந்தையானை.. – அப்பர் தேவாரம்
** அரிதல்= அறுத்தல்; அழித்தல்; "அரிவாய் அடியோடும் என் அகந்தையையே”- கந்தர் அனுபூதி

திருமால்:

அரி என்ற பெயரைத் தாங்கியவன்.  அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான் (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)   அவன் (நர)சிங்க உருக்கொண்டவன் அல்லது வானோரிடைச் சிங்கம் போன்றவன்**.  அவனுடைய பெருமையைக் கேட்டு அறிந்த நான்*, அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் ஆகாத எளியன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் கூறுவேன்.
* அரி = சிங்கம்
**அறி யான் – வினைத்தொகை

(இது மடக்கணி அமைந்த சிலேடை வெண்பா.)


அனந்த் 2-6-2016