Wednesday, December 19, 2018

சிதம்பர நாதன்


திருச்சிற்றம்பலம் 

                     <> சிதம்பர நாதன் <>

           

எனது மனையு மெனது பொருளும் சதமென் றமையும் கருத்ததே
தினமு மனத்தி லலைந்து திரியும் கவலை புகுத்தி வருத்துதே
உனது பெருமை நனவும் கனவும் உணரும் நிலையைப் பெறுவனோ?
தனது நடன முறையில் அரிய பொருளைத் தருமென் இறைவனே! 

நானா வகையிலும் நாடோ றுலகினில் நானிங் குறுதுயர் அறியாயோ?
நானா இதனையென் பாலே வருகவென் றேனென் றுனதுளம் அறியாதோ?
நானா ரெனுமறி வேநான் பெறவருள் நீயேன் தரவுளம் குறியாயோ?
கோனா யனுதினங்  கோலங் கொளுமிறை யேஉன் னருளெனைக் குறுகாதோ?

காடும் பொதுமன்றும் காணும் படியாகக் காலை உயர்தூக்கிச் சொகுசாக
ஆடும் பரமேசா ஆரோ சொலஉன்றன் தாளைச் சதமாக அகங்கொண்டு
வீடும் உறவோரும் போதும் எனவிட்டு மீளும் வகைகாண வருவேனை
வாடும் பயிராக வாதை யதுநீங்க வாவென் றழையாமல் விடுவாயோ?

அனந்த் 20-12-2018 (பிரதோஷம்)

Monday, December 3, 2018

பேறு

            திருச்சிற்றம்பலம்


                 <> பேறு <>

செய்பல வேள்வியால் எய்திடும் சீரெலாம்
மெய்யுணர் வைத்தர லாகிடுமோ?
உய்வதற் கோர்வழி ஐயனின் முன்னிரு
கைகுவித் தேத்திடல் என்றுணர்வாய்

வாயினால் ”அத்தனும் தாயும்நீ உன்முனம்
நாயினும் தாழ்ந்தவன் நானெனினும்
சேய்பிழை நீபொறுப் பாயென வந்துளேன்
நீயலா தார்துணை?” என்றிறைஞ்சிச்

சிற்சபை நாதனின் பொற்பதந் தூக்கிடும்
அற்புதக் காட்சியில் மெய்ம்மறந்தால்
முற்றிலும் உன்வினை இற்றிடும் நற்றவர்
பெற்றிடும் பேறுனைச் சார்ந்(து)அதனால்

நானவன் தானெனும் ஞானமுள் ஓங்கிடும்
மோனமும் கைவரும் காண்பதெல்லாம்
கோனவன் பேருரு தானெனும் உண்மையாம்
தேனினைத் துய்த்தலும் வாய்த்திடுமே

மேலுல காளுவோர் பாலுமில் லாதவோர்
சீலமி தைத்தரும் நாதனவன்
மேலவன் கீர்த்தியே மேலவன் பேரருள்
மேலவற் கேபணி செய்பவரே!

... அனந்த் 4-12-2018, பிரதோஷம்