Friday, November 25, 2016

கோலம் புரியும் ஜாலம்

    திருச்சிற்றம்பலம்

      
     <> கோலம் புரியும் ஜாலம் <>

கயிலைமலை மீதமர்ந்(து)இவ் அகிலமெல்லாம் ஆளும்நீல  
.. கண்டனின்பெ ருமைசொல்லப் போமோ? – அன்பர்
துயரையெல்லாம் தீயிலிட்ட தூசியென ஆக்குமந்தத்
... தூயவனுக்(கு) ஆரும் இணை ஆமோ?

வெண்பனிமேல் செம்பவள மேனியதன் பாதியினில்
…மின்னொளிர்ம ரகதப்பெண் ணோடு - இளம்
தண்மதி குளிர்புனலும் செஞ்சடையில் தாங்கிநிற்கும்
… சங்கரனைப் பல்வகைப்பண் ணோடு

அழகுதவழ் பாடலிலே அடியவர்கள் ஆயிரமாய்
.. ஆடிப்பாடிப் போற்றுவதைக் காதால் – கேட்டால்  
பழவினைகள் யாவும்கதிர் பட்டபனி போலழிந்து
.. பக்திவெள்ளம் நெஞ்சில்பெரு காதா? 

தேவர்முனி மாலயன்முன் சேவடியைத் தூக்கியவன்
… தில்லையிலே ஆடும்வகை கண்டால் – ஐயன்
யாவிலும் நிறைந்துலகை ஆட்டுவிக்கும் மாயம்தன்னை
… அறியநெஞ்சில் ஆசைவரல் உண்டாம்

அருவமென்றும் உருவமென்றும் அருவுருவ மென்றுமவை
.. யாவையும் கடந்து நிற்கும் கோலம் - தன்னில்
உருகிஉள்ளொ டுங்கையிலே ஊன்மறையும் ’நான்’மறையும்
… உண்மைஇ(து) அவன்புரியும் ஜாலம்!


அனந்த் 26-11-2016

Friday, November 11, 2016

இடமும் வலமும்

திருச்சிற்றம்பலம்

<> இடமும் வலமும் <>



உடலம் ஏதும் இல்லாப்பே(ர்)
.. உணர்வாய் நிற்கும் ஒருபரமன் 

அடவும் ஜதியும் அபிநயமும்
.. அழகார் பதமும் ஒருசேர 

நடனம் ஒன்றை அம்பலத்தில்
.. நாளும் ஆடல் எங்ஙன்எனின்

இடமோர் பங்கில் இனிதுறையும்
.. எங்கள் அன்னை தயவாமே.

(அருவான பரசிவம் உருவம் கொள்ளச் சக்தியின் துணை தேவை என்றவாறு

                         *****













ஆட்டம் புரிய இயல்வதவள்
.. அளிக்கும் ஆற்றல் எனக்கண்டு

நாட்டம் அவள்பால் இருத்தித்தன்
.. நடத்தில் இடக்கால் தூக்கியபின்

ஊட்டம் பெற்று மதுரையிலே
.. ஒருவற் காக வலம்மேலாய்க்

காட்டி ஆடத் துணிந்தவனின்*
.. கால்கள் நமக்குக் கதியாமே.

(*இது ராஜசேகரன் என்னும் பாண்டிய மன்னன் ஆடலரசனுக்கு விடுத்த வேண்டுகோளைக்கு இணங்கிக் கால்மாற்றி ஆடியதைக் குறிப்பது)

                         *****


 
​​










இடமோ வலமோ எதுவெனினும்
.. என்றன் மனத்தில் அருவுருவாய்த்

திடமாய் நிலைத்த என்னரசே!
.. தேவை இதன்மேல் வேறிலையே

படமார் பாம்புன் திருமேனி
.. படர்ந்த வகையாய் நானுன்னை

விடவே மாட்டேன் எனைவிட்டு
.. வேற்றாய் நிற்றல் இயலாதே.

                         *****
..அனந்த்

 12-11-2016 (சனிப் பிரதோஷம்)