Friday, December 29, 2017

தொழ அருள்வாய்

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

              திருச்சிற்றம்பலம்

       <>  தொழ அருள்வாய் <>























கரும்பின் தெளிவாய்க் கற்கண் டாய்த்தீங்
.. கனியாய் இனிக்கும் கடலமுதே
…. ககனப் பரப்பே கதிரின் ஒளியே
….. காற்றே நிலனே செவ்விதழில்

அரும்பும் நகையோ(டுஅன்னை காண
.. அழகாய்ப் பொன்னம் பலந்தனில்
…… ஆடி அவளுன் நடத்தைப் புகழ
………..ஆசை கொள்ளும் மணவாளா

விரும்பும் அடியார்க் கெதுவும் தருமோர்
.. வித்தை தெரிந்த விமலாயான்
…… விண்மண் வேண்டேன் விரையார் கழற்கீழ்
……. வீழ்ந்தே கிடக்க வேண்டுவன்இத்

 துரும்பின் சிறியேன் துதியால் உன்னைத்
… தொழவும் விழைவேன் அருளாயோ?
…… துரியா தீதப் பரமே ஞானச்
……… சுடரே தில்லைப் பதிவாழ்வே!

.. அனந்த்  30-12-2017  (நன்றியுடன் படம்: சு.ரவி )

Thursday, December 14, 2017

விடுவேனோ?

                             திருச்சிற்றம்பலம் 

               

                            <> விடுவேனோ? <>

விடுவேனோ உன்னை முதன்முறை கண்ட விநாடியிலே
தொடுவானம் கைகளிற் சிக்கிய தென்னும் சுகங்கொடுத்தாய்
படுபாவி என்னும் பெயரென்னை விட்டுப் பறந்ததினிச்
சுடுகாடும் தாண்டித் தொடர்ந்தென் பிடியினில் சிக்குவையே.

சிக்கி வலையுள் சிறகின் பயனின்றித் தொய்ந்துபயம்
மிக்கப் பெருகி விடுதலை காண விழையுமொரு
பட்சி யெனப்பவப் பந்தத்தில் மாட்டிப் பதறிநின்றேன்
தக்க தருணம் தனில்மீட்(டு) எனதுளில் தக்கினையே.
 (தக்குதல் = வசப்படல், ஆட்சிக்குட்படல்)  

இனைநீ எனவறி யாதென் மனத்தினிற்(கு) இட்டமுள
அனைத்தின் சுகமும் அனுபவிப் பேனெனும் ஆர்த்தியுடன்
முனைந்திவ் வுலகில் முயங்கிச் சலித்தவிம் மூடனுள்நின்
நினைப்பைப் புகட்டி நிறைத்து வழங்கினை நிம்மதியே.
(இனைஇன்ன தமையுடையாய்; ஆர்த்தி=விருப்பம்)

வினையாம் விதையென் மனமாம் நிலத்தில் விளைத்தபயன்
அனைத்தும் அழியும் அகத்துள் அரனுன் அருட்பதத்தை
 நினைத்த நிமிடமென் றுன்னடி யார்சொலை நெஞ்சிருத்தித்
தினத்தைக் கழிப்பேன் தெரிசனம்  என்னுள் தெரிவதற்கே.

தெரியும் எவையுளும் தேவனைக் காணு(ம்)மெய்ச் சீர்படைத்தோர்
அரியர் அவர்தாள் பணிந்துன் அருளை அடைந்திடலே
சரியை கிரியை தவத்திலும் சாலச் சிறந்தெனப்
பெரியர் புகல்வரப் பேறெனக் கெட்டும் படியருளே.


..அனந்த்  15-12-2017 பிரதோஷ நன்னாள்