Wednesday, September 25, 2019

அதுவே போதும்

                        திருச்சிற்றம்பலம்


                      <> அதுவே போதும் <>

                  

உன்னருள் கிட்டநான் ஆற்றிலேன் உனக்கென ஒருவகைப் பணிக ளேனும்
… உரைப்பதற் கேற்றதோர் உத்தமப் பண்பெதும் உண்மையில் துவுமில்லாப்

புன்மையேன் ஆயினும் புனிதநின் திருவருள் வரம்பிலா வாரி யென்று
.. புகன்றிடக் கேட்டுளேன் புல்லன்நான் ஆகையால் புறக்கணித் திடுத லென்ப(து)

அன்னியம் உனக்கென அறிந்தபின் வந்துளேன் ஆதரித் தருளு வாயேல்
.. அகன்றிடும் என்துயர் அதன்பினென் ழுகுரல் உன்செவி மடுக்க வேண்டா

பொன்னிற மேனியும் பூணும்வி பூதியும் புரிசடை மீது கொன்றை
.. புரளுமக் கோலமும் பொருந்தநீ வருமெழில் காட்டினால் போதும் ஐயே.

(14-சீர் ஆசிரிய விருத்தம். அரையடி: கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா -படிக்கையில் ஈற்றுச் சீரை விளங்காய்ச் சீராகவும் கொண்டு படிக்கலாம்.)

... அனந்த் 26-9-2019

Tuesday, September 10, 2019

ஆடலரசன்


                             திருச்சிற்றம்பலம்

                
















                     <> ஆடலரசன் <>

நடமாடீ கண்ட விடமாடீ பெண்ணோர்
இடமாடீ தீயாடீ என்றன்உடலாடும்
நெஞ்சத் தடமாடி நீவந்தாங்(கு) ஆடென்று
கெஞ்சுகின்றேன் மன்றாடி கேள்.

(நடமாடீ = நடனம் செய்பவனே; துபோல மேல்வரும் விடமாடீ என்ப விளிச்சொற்கள்; ஆடுதல் = அசைதல், அலைதல், நடஞ்செய்தல், அனுபவித்தல், செய்தல், கலத்தல்,…;  கண்ட விடம் = கழுத்தில் விடம் அல்லது காணும் பல இடங்களில்; தடம் = இடம், வெளி..…; தடனாடி = தடம்+நாடி; மன்றாடி = குறையிரந்து வேண்டி அல்லது வழக்காடி, (சிவனும் மன்று ஆடி தான்! )
ஈற்றடியில்பின்னிரு சொற்களை இடம்மாற்றிப் (கொண்டுகூட்டிப்) பொருள் கொள்ள வேண்டும்)

நீறாடி அன்பர்பொழி நீராடி அஞ்சடைமேல்
ஆறாடி சீறும்  அரவாடி மங்கையொரு
கூறாடி கூத்தாடி கூர்வேற் படையாடி
சீராடி உய்வோம் தெளிந்து.

(முதல் மூன்றடிகளில் ஆடி என்பது பெயர்ச்சொல்லாகவும் ஈற்றடியில் வினையெச்சமாகவும் பயிலும். ஈற்றடியில், பின்னிரு சொற்களை இடம்மாற்றிப் (கொண்டுகூட்டிப்) பொருள் கொள்ள வேண்டும்.)

அனந்த் 11-9-2019