Tuesday, October 21, 2014

பிணிக்கு மருந்து

இன்று பிரதோஷ நன்னாள். 
 
திருச்சிற்றம்பலம் 




<> பிணிக்கு மருந்து <>

(பதினான்கு சீர் விருத்தம். அரையடி வாய்பாடு: புளிமாங்காய், மா, காய், மா, காய், மா, புளிமா)

நிலையாத இந்த நெடுமேனி தன்னை நிலையாக்க எண்ணி மனிதர்
.. நிரையாக நித்தம்  அலைபோலத் தம்முள்  வருநோயை நீக்கு விதமாய்க்

கலையாவும் பேணிக் கணந்தோறும் நூறு வகையான பேர்கொள் மருந்தைக் 
.. கடிதாகக் கொண்டு வருவார்உ டம்பு குணமான பின்னும் மனத்தின் 

அலைபாயும் தன்மை  தொலையாமல் தொல்லை உறு(ம்)வேளை எந்த வகையில்
.. அதைநீக்கு வோமென்(று) அறியாமல் வாடி அழியாதி ருக்கக் கயிலை

மலைமீது ஞான மருந்தாய்இ லங்கும் மாதேவன் தாளை நினைக்கில்
.. மறுசன்ம மென்னும் பிணிநீங்கி  என்றும் மறையாத இன்பம் றுமே.

... அனந்த்
21-10-2014

Monday, October 6, 2014

மேலும் ஒரு பணி

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
 

<> மேலும் ஒரு பணி <>


முத்தொழி லோடு மேலிரு செயல்புரி

... முக்கணா! இனிஇவ் விடத்தில்


சொத்தையாம் உடலில் தொற்றிய நோயொடு

... சொல்லவும் கூசும் படியாய்


அத்தனைக் கொடிய நினைவுகள் மலிந்துள

... அகத்தொடும் திரியும் எனையுன்


பத்தனாய் மாற்றும் பணியையும் கருதிஉம்

... பட்டியல் தனில்சேர்த் திடுமே.

(மேலிரு தொழில்கள் – படைத்தல், காத்தல், அழைத்தல் என்னும் மூன்று தொழில்களோடு, மறைத்தல், அருளல் என்பனவும் சேர்ந்த பஞ்சகிருத்தியங்களைச் சிவபெருமான் செய்வதைக் குறிப்பது.  சொத்தை= சீர்கேடு, ஊனம். எழுசீர் விருத்தம்: கூவிளம், மா, விளம், விளம், விளம், மா, புளிமா)

.அனந்த்  
6-10-2014