Monday, November 19, 2018

பிறவிப்பயன்

               திருச்சிற்றம்பலம் 




            <> பிறவிப்பயன் <>

உடுக்கள் வானக் கூரையிலே
.. உலவத் தொடங்கும் வேளையிலே 
….. ஓய்வு பெறுதற் காதவனும்    
…….. ஒருபால் ஒடுங்கி ஒளிகையிலே

உடுத்த புலித்தோல் மருங்கசைய         
உடுக்கை ஒன்றைக் கையேந்தி    
….. ஒள்ளிய பிறையைச் சடையிலணிந்(து) 
………. உலகோர் எவரும் காணும்வண்ணம்

அடுத்தி ருக்கும் அன்னையுடன்
.. ஆ!ஆ! இதுவே கயிலையென
…. அன்பர் கூவத் தில்லையிலே
……. ஐயன் நடனம் ஆடுகின்றான்

எடுத்த பிறவிப் பயனடைய
… இதைக்காண் பதுவே வழியலவோ?
….. என்னைப் போன்ற பாவியர்க்கும்
……… இதுபோல் அருளும் இறையுண்டோ?


... அனந்த் 20-11-2018 (பிரதோஷம்)

Sunday, November 4, 2018

அன்னையும் நீயும்

                           திருச்சிற்றம்பலம்

                       <> அன்னையும் நீயும் <> 
​              

தண்டும் செருப்பும் கல்லும் வில்லும் உன்றன் திருமேனி
… தீண்டும் வண்ணம் திக்கில் லாமல் முன்னம் திரிந்தஉனைக்
கண்டுள் இரங்கிக் கயிலைப் பதிவாழ் கௌரி கனிவுடனுன்
… கையைப் பிடித்துக் கணவ னாகக் கொண்டாள், இங்கேநான்
மண்டும் பிணிசேர் உடலும் அதனின் கொடிய மனமுமென்னை
… வாட்டும் வகையில் வாழும் போது கதிநீ எனஉன்னை
அண்டும் பொழுதில் அணைத்தென் துயரை ஆற்றா யெனில்அருகார்
.. அன்னை உன்னைச் சினப்பாள் எனநீ அறியா திருப்பாயோ?
(தண்டு – பாண்டியனின் பிரம்பு; செருப்பு- கண்ணப்பன் காலணி; கல் – சாக்கிய நாயனார் எறிந்தது; வில் – அருச்சுனனின் காண்டீபம்; அருகார் = அருகுஆர், அருகிலுள்ள)

அனந்த் 5-11-2018 சோமவாரப் பிரதோஷம்