Monday, April 17, 2023

துயர் துடைப்பாய்

 திருச்சிற்றம்பலம்

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
            

         

                          Chidhambaram Natarajar-Sivakami-Rishis.jpg

    

அழுகின்றேன் ஐயாநின் அருளறியா

… தஞ்ஞானக் குழியின் னுள்ளே

விழுகின்றேன் வாணாளை வீணாளாய்

.. வெறும்சடமாய் வினையாம் வித்தை

உழுகின்றேன் இனித்தாங்கேன் உலவுவிடை

.. உடையானுன் தாளில் வீழ்ந்து

தொழுகின்றேன் கதறுகிறேன் என்துயரைத்

.. துடைத்தருளாய் தில்லை வேந்தே.

(வித்தை விதையை.)  

                **** 


கூளம் பெருக்கிக் குவித்துவைத்துக்

.. கும்பிட் டுழலும் என்மனத்தால்


நாளும் நானிங் குறுதுன்பம்

.. நாயும் உறாதென் நாயக!உன்


தாளென் உளத்தில் இருத்துவையேல்

… தழலில் இட்ட சரகாகத்


தூளாய்த் துன்பம் சிதறாதோ

.. சொல்லாய் தில்லைப் பெருமானே.



                                                                                                      ..அனந்த் 17-4-2023

Sunday, April 2, 2023

 இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                              <> அரு மருந்து <> 

                          

                என்றுமுள என்னிறையே ஏடுகளில் நின்னுருவை

                ஒன்றென்பார் இரண்டென்பார் ஒன்றுமிலாப் போதமென்பார்

                மன்றினிலே காட்சிதரும் மாமணியுன் நடனத்தில்

                ஒன்றிநிற்றல் ஒன்றன்றி எனக்கேதும் தெரிந்திலதே. 


                கண்டநாள் முதலென்றன் கருத்தினுள் புகுந்துனக்குத்

                தொண்டுசெய் அடியார்க்குத் தொழும்பனாய்ச் செய்வித்தாய்

                விண்டுன சீர்விளம்பும் வித்தகர்பால் கூட்டுவித்தாய்

                மண்டுமென் பவநோய்க்கு மருந்திதென்(று) அருந்துவனே


                வரம்பில்லா வனமொன்றை யொத்தஎன்றன் மனத்தினிலே

                பரந்தெரியும் எண்ணமெனும் பேரனலை நின்விழியில்

                சுரந்திடுமுன் பேரருளாம் தூநீரால் அணைத்திடெனக்

                கரங்குவித்து வேண்டிநின்றேன் காத்திடுவாய் எம்மானே. 


                                                                                ... அனந்த் 3-4-2023