Sunday, December 25, 2016

தியாக மூர்த்தி

திருச்சிற்றம்பலம்                                                      

                                                        <> தியாக மூர்த்தி <>


தத்துவப் பொருளென உருவிலா அறிவெனத்
.. தனித்தவோர் நிலையை விட்டுத்
… தரணிவாழ் மானிடர் தமதிடர் களையுமோர்
…. தயையினால் ஐய னேநீ

அத்தனும் அன்னையும் இன்றிய நாதியாய்
… ஆங்குதித்(து) அதைய டுத்தே
….. ஆசையால் மலைமகள் கைத்தலம் பற்றினாய்
…… அதன்விளை வாக வந்த

புத்திரர் இருவருள் மூத்தவன் ஆனையாய்ப்
… பின்னவன் ஆண்டி யென்று
புவனியோர் ஏசினும் பொறுத்தனை பசிக்கையில்
… புசிப்பதற் குணவு மின்றி

இத்தரை மீதிலே இரக்கவும் செய்தனை
.. இத்தகைத் தியாகம் எல்லாம்
… எமக்கென ஏற்றநின் கருணையின் எல்லையை
…. என்சொலி ஏத்து வேனே.

..அனந்த்
26-12-2016 சோமவாரப் பிரதோஷம்

Saturday, December 10, 2016

ஒற்றைத் தனியன்

திருச்சிற்றம்பலம் 


                                      <> ஒற்றைத் தனியன் <>

                                                         

ஒற்றை ஆளாய் எருதேறி உலகைச் சுற்றி இரந்துண்பாய்
ஒற்றைச் சொல்லில் உறைந்திருக்கும் உண்மை உரையா துரைத்திடுவாய்*
ஒற்றைத் தனியாய் ஒப்பிடவே றொன்றும் இல்லாப் பரம்பொருளே!
ஒற்றிக் கொண்டேன் உன்னுடன்நான் ஒற்றி யூர்வாழ் பெருமானே.

(*மௌனமாய்)

      
               <> ஒன்று கேட்பேன் <>

Inline image 5    Inline image 6

காலொன்று தூக்கிக் கரமொன்று காட்டிக் கனகமன்றில்
கோலொன்று தாங்கிக் கிழமொன்று காணக் குதிக்குமுன்றன்
பாலொன்று கேட்பேன் பயனொன்று மில்லாத பாரிதனில்
சூலொன்றில் வீழும் துயரொன்றும் வாராச் சுகமருளே.  
(சூல் - கருப்பப் பை)


<> ஒன்றே பலவாம் <>

Inline image 7

ஒருமையே மேன்மை யென்று தனிமையில் அமர்ந்து பின்னர் 
இருமையாய்ப் பலவாய் ஆன புதுமையோய்! இயம்ப லாகாப்
பெருமையோய்! மறுமை இம்மைப் பிறப்பிலா மெய்ம்மை யோனே!
கருமைசேர் கண்டத் தோய்!என் கயமையை நீக்கு வாயே !

.. அனந்த் 11-12-2016

(சிவலிங்கம் படம்: திருவொற்றியூர் ஆதிபுரீச்வரர் - நன்றி: இணையத் தளம்)

Friday, November 25, 2016

கோலம் புரியும் ஜாலம்

    திருச்சிற்றம்பலம்

      
     <> கோலம் புரியும் ஜாலம் <>

கயிலைமலை மீதமர்ந்(து)இவ் அகிலமெல்லாம் ஆளும்நீல  
.. கண்டனின்பெ ருமைசொல்லப் போமோ? – அன்பர்
துயரையெல்லாம் தீயிலிட்ட தூசியென ஆக்குமந்தத்
... தூயவனுக்(கு) ஆரும் இணை ஆமோ?

வெண்பனிமேல் செம்பவள மேனியதன் பாதியினில்
…மின்னொளிர்ம ரகதப்பெண் ணோடு - இளம்
தண்மதி குளிர்புனலும் செஞ்சடையில் தாங்கிநிற்கும்
… சங்கரனைப் பல்வகைப்பண் ணோடு

அழகுதவழ் பாடலிலே அடியவர்கள் ஆயிரமாய்
.. ஆடிப்பாடிப் போற்றுவதைக் காதால் – கேட்டால்  
பழவினைகள் யாவும்கதிர் பட்டபனி போலழிந்து
.. பக்திவெள்ளம் நெஞ்சில்பெரு காதா? 

தேவர்முனி மாலயன்முன் சேவடியைத் தூக்கியவன்
… தில்லையிலே ஆடும்வகை கண்டால் – ஐயன்
யாவிலும் நிறைந்துலகை ஆட்டுவிக்கும் மாயம்தன்னை
… அறியநெஞ்சில் ஆசைவரல் உண்டாம்

அருவமென்றும் உருவமென்றும் அருவுருவ மென்றுமவை
.. யாவையும் கடந்து நிற்கும் கோலம் - தன்னில்
உருகிஉள்ளொ டுங்கையிலே ஊன்மறையும் ’நான்’மறையும்
… உண்மைஇ(து) அவன்புரியும் ஜாலம்!


அனந்த் 26-11-2016

Friday, November 11, 2016

இடமும் வலமும்

திருச்சிற்றம்பலம்

<> இடமும் வலமும் <>



உடலம் ஏதும் இல்லாப்பே(ர்)
.. உணர்வாய் நிற்கும் ஒருபரமன் 

அடவும் ஜதியும் அபிநயமும்
.. அழகார் பதமும் ஒருசேர 

நடனம் ஒன்றை அம்பலத்தில்
.. நாளும் ஆடல் எங்ஙன்எனின்

இடமோர் பங்கில் இனிதுறையும்
.. எங்கள் அன்னை தயவாமே.

(அருவான பரசிவம் உருவம் கொள்ளச் சக்தியின் துணை தேவை என்றவாறு

                         *****













ஆட்டம் புரிய இயல்வதவள்
.. அளிக்கும் ஆற்றல் எனக்கண்டு

நாட்டம் அவள்பால் இருத்தித்தன்
.. நடத்தில் இடக்கால் தூக்கியபின்

ஊட்டம் பெற்று மதுரையிலே
.. ஒருவற் காக வலம்மேலாய்க்

காட்டி ஆடத் துணிந்தவனின்*
.. கால்கள் நமக்குக் கதியாமே.

(*இது ராஜசேகரன் என்னும் பாண்டிய மன்னன் ஆடலரசனுக்கு விடுத்த வேண்டுகோளைக்கு இணங்கிக் கால்மாற்றி ஆடியதைக் குறிப்பது)

                         *****


 
​​










இடமோ வலமோ எதுவெனினும்
.. என்றன் மனத்தில் அருவுருவாய்த்

திடமாய் நிலைத்த என்னரசே!
.. தேவை இதன்மேல் வேறிலையே

படமார் பாம்புன் திருமேனி
.. படர்ந்த வகையாய் நானுன்னை

விடவே மாட்டேன் எனைவிட்டு
.. வேற்றாய் நிற்றல் இயலாதே.

                         *****
..அனந்த்

 12-11-2016 (சனிப் பிரதோஷம்)

Wednesday, October 26, 2016

கருணை இமயம்

                  திருச்சிற்றம்பலம்
         

                <> கருணை இமயம் <>

கள்ளக் குரம்பையொன்றைக் காட்டியெனை அதில்புகுத்தித்
தள்ளிவிட்டாய் என்றுபழி சாற்றியஎன் கண்முன்னே
வெள்ளச் சடையோய்!உன் விந்தைஉருக் காட்டிஇன்ப
வெள்ளத்தில் ஆழ்த்தியபின் வேறுநினைப்(பு) அகற்றிஎன்றன்
உள்ளத்தின் அடித்தளத்தில் உன்னிருப்பை உணரவைத்தாய்
பள்ளத்தில் இருந்தேனைப் பனிவரையில் உறைவோய்!நீ
மெள்ள எடுத்துன்றன் மேன்மை தெரியவைத்தாய்
வள்ளலுன்றன் கருணைசொல வார்த்தையிலா(து) ஆகினனே!
(குரம்பை = உடல்)

...அனந்த் 27-10-2016

Wednesday, October 12, 2016

தில்லை இறை

               திருச்சிற்றம்பலம்

          <> தில்லை இறை <>



















தில்லையிலே ஆடிடுவான் தேடுபவர் மனவெளியின்
எல்லையிலே ஆடிடுவான் எழுந்தருள வேண்டினொரு
கல்லினிலே ஆடிடுவான் கசிந்துருகி நாவுரைக்கும்
சொல்லினிலே ஆடிடுவான் தோற்றமிலாப் பரம்பொருளே  (1)

பரமென்றும் இகமென்றும் பாரென்றும் விண்ணென்றும்
நிரந்தரமாய் நின்றிவற்றின் நீங்கியுள்ள வாலிறைவன்
உரமிகுந்த அகந்தையைஉட் புறமெரிப்பான் தனைஅறிய
வரந்தருவான் மலமகல வேண்டிடும்தன் அடியவர்க்கே.       (2)

அடியென்றும் முடியென்றும் யாதுமிலாத் தீப்பிழம்பாய்
நெடியபர தத்துவத்தின் நீர்மைஅரி அயனறியும்
படிநின்ற பரமன்தன் பத்தரது மனக்குகையில்
குடிகொண்டு மெய்யுணர்வின் கோலத்தைக் காட்டிடுமே.    (3)

காட்டினிலே ஆடுகின்ற காட்சியிலே மாந்தர்உடற்
கூட்டினது நிலையாமை குறித்தவர்கள் கரையேறி
வீட்டின்பம் பெறு(ம்)வழியை விளக்கிடுவான் தாயைநிகர்
பாட்டியவள்* பாட்டில்உறை பொருளாகத் திகழ்பரமே.       (4)

(*பாட்டி – பேயுருக் கொண்டு, சுடுகாட்டில் பரமனின் ஆட்டத்தைக் கண்டு பாடும்  - சிவபெருமானால் ’தாயே!’ என்றழைக்கப்பட்ட பெருமை கொண்ட - காரைக்கால் அம்மையாரைக்  குறிப்பது.)

திகட்டாத தெள்ளமுதாய்ச் சிந்தையிலே ஊறிஇந்த
சகத்திலுள்ள சங்கமத்துள் தாவரத்துள் சீவர்கள்தம்
அகத்தினுளும் மெய்யுணர்வாய் அனவரதம் விளங்கிடுவான்
முகத்தினில்மென் முறுவலுடன் மன்றாடும் தில்லையனே      (5)

(அந்தாதிப் பஞ்சகம்; படம்: “நடராசப் பெருமான்” திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2001)    

.. அனந்த் 13-10-2016

Wednesday, September 28, 2016

உணர்வு

                                            திருச்சிற்றம்பலம்
    
                                                <> உணர்வு <>

                                              
                                

என்னை உற்றுப் பாரென்றான் எழிலார் கோலக் கொள்ளையிலே
… என்றன் கண்ணோ(டு) இதரபுலன் எல்லாம் நிலைக்கத் தொடங்கையிலே

மின்னல் வேகத் தில்மறைந்தான் வாதை நெஞ்சில் பரவுகையில்   
… விண்ணும் மண்ணும் விரிந்தவொரு வெளியில் நடனக் காட்சியினை                                                                                                                                     
உன்ன வைத்தான் இனியிதனை உன்னுள் ளேநீ பாரென்றான்
… உள்ளே சென்றேன் பின்அதற்கும் உள்ளே செல்லென் றாணையிட்டான்

அன்ன வண்ணம் செல்கையிலே அனைத்தும் இழந்தேன் அதனையடுத்(து)
… அவனே நானாய் ஆகுமுனம் ஐயோ! கனவு கலைந்ததுவே!

… அனந்த்  29-6-2016 

Wednesday, September 14, 2016

நாடல்

            திருச்சிற்றம்பலம்  
        
             <> நாடல் <>

 Inline image 1

ஒளியை உமிழும் வெண்மதியும்
… உலவும் புனலும் சடைநாட

நெளியும் மின்ன லனையரவம்
.. நிமிர்ந்த மார்பம் தனைநாட

அளியின் உருவாம் அன்னையவள்
.. ஆகத் தரைப்பங் கினைநாட

எளியன் அரனுன் இணையடியை
.. என்பங் கெனவே நாடுவனே.

(அனை அரவம் = அனைய அரவம்; மார்பம் = மார்பு; அளி = கருணை; ஆகத்தரை = ஆகத்து அரை; மேனியில் பாதி)

                                              ******
                     <> மேலோன் <>

 Inline image 2

சடையும் அதன்மேலொரு மலரும்
… சலமும் அதன்மேலொளிர் மதியும்

உடையும் அதன்மேல்நெளி அரவும்
.. உடலும் அதன்மேலுறை உமையும்

விடையும் அதன்மேலமர் எழிலும்
.. விரவும் அரன்மேலொரு பரிவை

உடையோர் அவர்மேல்வளர் உறவும் 
.. உறுமின் அதன்மேலெதும் இலையே.
 
அனந்த்
14-9-2016