Saturday, April 18, 2020

ஆதாரம்

       
          திருச்சிற்றம்பலம்

       

          <> ஆதாரம் <>

சந்தம்: தனன தான தானான தனன தான தனதான
தனன தான தானான தனதான

உடலு நானு வேறாகு முணர்வு ளூறி மயல்பாறி
..யுடைய நாளு மோயாத சமுசாரக்
கடலை மீறி மேலான பதம தீயு பதமான
… கமல மேயெ னாதார மலவோமுன்
விடம தேயொர் வாகாக மிடறி லேறி யணியாகி
... விமலை வீரி சீர்கூற வவளோடு
நடன ராச னாய்நாலு மறைக ளோசை வானேகு
..  நகர மீது நாடோறு மிளிர்வோனே

 (பாறி = அழிந்து, கிழிபட்டு; பதம் = பதவி, பாதம்; வாகாக =அழகாக )

பதம் பிரித்து:
உடலும் நானும் வேறுஆகும் உணர்வுஉள் ஊறி மயல்பாறி
..உடைய நாளும் ஓயாத சமுசாரக்
கடலை மீறி மேலான பதம்அது ஈயும் பதமான
… கமல மேஎன் ஆதாரம் அலவோ?முன்
விடம தேஒர் வாகாக மிடறில் ஏறி அணிஆகி
... விமலை வீரி சீர்கூற அவளோடு
நடன ராச னாய்நாலு மறைகள் ஓசை வான்ஏகும்
.. நகரம் மீது நாள்தோறும் மிளிர்வோனே.

(பின்னிரு அடிகளின் விளக்கம்: உலகை அழியாமல் காப்பதற்காக  ஆலகால விடத்தை ஈசன் உண்டபோது அது அழகாக ஐயன் கழுத்திலேறி ஒரு ஆபரணம் போலாகியது மட்டுமன்றி, அவ்விடம் அரனின் உடலைப் பாதிக்காமல் இருக்க அது கழுத்தோடு நிற்குமாறு செய்த உமை அன்னையின் பெருமையையும் பறைசாற்றியது; அவளோடு ஈசன் தில்லையில் நடனம் செய்வது இறுதியில் சுட்டப்படுகிறது.

... அனந்த் 19-4-2020

Saturday, April 4, 2020

வழி

 திருச்சிற்றம்பலம் 

                                 <> வழி <>

Siva dance with agni.jpg          Nataraaja n Sivakami 3.jpg


ஊனார் உடலை
நானென் றெண்ணி
நானா வழியிற் சென்றேனைத்
தானாய் என்றன்
கோன்முன் தோன்றி
வாஇங்(குஎனவே அழைத்தனனே

ஏனோ அவன்சொல்
தேனாய் இனிக்க
நானும் அவன்பால் நாடுங்கால்
தேனார் மொழியாள்
தானோர் பங்கன்
கானை நோக்கி நடந்தாங்கே

எரியில் வெந்து
கரியும் உடல்கள்
நரிகள் பேய்கள் நடுவேதன்
விரிசெஞ் சடையில்
சொரிநீர் தெறிக்க
ஒருகூத் ததனைக் காண்பித்தான்

தன்னை மறந்தென்
முன்னர்க் காணும்
அன்னான் உருவில் திளைத்தேனை
இன்னும் உளதென்
பின்னர் வாவென்(று)
என்னை அழைத்துத் தில்லைப்பொற்

பதியை அடைந்து
மதிசேர் சடையன்
அதிஅற் புதமாம் மன்றில்தன்
சதிரா டிடுமோர்
பத(ம்)முன் காட்டி
இதுவுன் வழியென் றேமீண்டான்!  
  
அனந்த் 5-4-2020 (பிரதோஷம்)