Wednesday, August 22, 2018

மன்றில் காணீர்!



திருச்சிற்றம்பலம்


































<>  மன்றில் காணீர்!  <>
 
தூய்மையை விளக்கும் தேகம்
.. துறவினை ஏற்கும் தியாகம்
வாய்மையின் முடிபாய் மோனம்
.. மறைபுகல் ஞான கானம்
தாயினும் அளிசேர் உள்ளம்
.. தலையிலே உலவும் வெள்ளம்
போயிவை காணீர் மன்றில்
.. புரிநடத் தோன்பால் இன்றே.

ஒருகையில் உலகின் தோற்றம்
.. ஒருகையால் அனைத்தின் ஏற்றம்
ஒருகையோ உயிரின் கூற்றம்
ஒருகையங்(கு) அவற்றின் மாற்றம்*
ஒருகையால் அருளின் ஊற்றம்
.. உவகையோ(டு) இவற்றைச் சாற்றும்
திருவுரு காணீர் தில்லைத்
.. திருத்தல மன்றில் இன்றே.
(*திரோதானம்)

காலமோ(டு) இடம்க டந்த
.. காரண வத்து ஒன்றின்
சீலமீ தென்று காட்டும்
.. சித்வெளி தனையும் இந்த
ஞாலமீ துருவங் கொள்ள
.. நாட்டிய விதையாம் லிங்கக்
கோலமே யாதும் ஆகும்
.. கூத்தையும் மன்றில் காணீர்! **
(மேற்குறித்த சித்வெளி, லிங்கம், கூத்தாடும் வடிவம் ஆகியவை, முறையே சிவதத்துவத்தின் காரண, சூக்கும , தூல வடிவங்களைச் சுட்டும்.)

அனந்த் 22/23-8-2018

(இணைப்புப் படம், நன்றியுடன்: ”நடராசப் பெருமான்”- திருவாவடுதுறை ஆதீனம் பதிப்பு, 2001)

Wednesday, August 8, 2018

இடம் கொண்டான்


                    திருச்சிற்றம்பலம்
                                                                  
            

        <> இடம் கொண்டான் <>

உண்டவிடம் கண்டத்தில் ஒட்டிநிற்க உம்அரையை
மண்டிவிடப் பாம்பொன்று சுற்றிநிற்க – உண்டியைக்
கண்டவிடம் ஓடிப்போய்க் கையேந்தும் உம்மைநான்
கொண்டவிடம் உள்ளக் குகை.  1

குகனுக்குத் தந்தையெனக் கொண்டாடும் நீரோ
மகன்முன்னே மண்டி யிடுவீர் – அகத்தில்
இருபெண்டிர் கொள்ளுவீர் ஏதேனும் சொன்னால்
தருவடியில் மௌனியா வீர்.  2

வீரத்தைக் காட்டுதற்கு வில்லோடு வேட்டைக்குத்
தாரத்தைக் கூட்டித் தருக்கோடு – சேருவீர்
காட்டை;அங்குப் பார்த்தன்கைக் காண்டீபத் தாலடிக்கக்
காட்டுவீர் உம்தலையைச் சாய்த்து.  3

பன்றிமேல் நீர்வைத்த பற்றினால் கொண்டஅடி
ஒன்றுபோ தாதெனவோர் கூலியாய்ச் - சென்றடி
பட்டவிடம் நோவுதென்பீர் பாரோரெல் லாம்அடி
பட்டங்கே ஓலமிடும் போது.  4

காட்டில்வே டற்கெனக் கண்ணில்புண் கொள்ளுவீர்
நாட்டார் நகைக்கவோர் நக்கனுமாய்க் – காட்சி
தருவீர் இவைதெரிந்தும் சார்வார் அடியார்
குருதமக்(குஎன்றும்மைக் கொண்டு.  5

இடங்கொடுத்தான் மாமன் குடியிருக்க* என்றோர்
இடங்கொடுத்தீர் பெண்ணுக்(குஇடத்தை** – இடங்கொடுத்தீர்
பெண்ணுக்குப் #பேரளவில் என்றுலகோர் கூறுவர்உம்
கண்ணுக்கு முன்னே கரித்து.  6

(*இமவான் தன் மலையில் வசிக்க இடங்கொடுத்ததைச் சுட்டியது;
**இடத்தை = இடது பாகத்தை#பேரளவில்பெருமளவில், பேருக்கு மட்டுமாக)


பெண்கொடுத் திடம்கொடுத்தான் பேரரையன் என்பதனால்
மண்சொல்லும் நீர்கொடுத்து வைத்ததாய்க் – கண்ணனைய
பெண்ணுக்கு நீரும்தான் பேணி இடம்கொடுத்தும்
மண்ணிலிரந் துண்ணல்உம் வாழ்வு.  7

இடம்கொடுத்த காரணத்தால் ஈச!நின் மனையாள்
விடங்கெடுக்கா(துஉம்மையன்று மீட்டாள் – கொடிய
எமனைத்தன் கால்தூக்கி எற்றியுனை ஊரார்
தமதிறையாய்க் கொள்ளவைத் தாள்.  8

கள்ளவிடம் என்றும் கலம்கல மாய்நிறைந்
துள்ளவிட மாமென்றன் உள்ளத்தைத்– தெள்ளமுதம்
துள்ளுமிட மாக்கியென்றன் தூசறுத்தோன் கால்தூக்கித்
துள்ளுமிடம் தில்லைமட மே. 9

இடம்பொருள் காலம் எனுமெல்லை யாவுங்
கடந்த ககனத்தில் ஞானச் – சுடராய்
நடஞ்செய்யும் நாதன் நமக்கெனத் தில்லை
இடங்கொண்டான் ஈதே அருள். 10.

... அனந்த் 8-8-2018

(கானடாவில் இன்று (8th) பிரதோஷம்)