Saturday, February 20, 2016

பரிந்துரை கூறீரோ?



திருச்சிற்றம்பலம்

 

<> பரிந்துரை கூறீரோ? <> 

முந்தி அரன்ஆணை முற்றும் நிறைவேற்றும்
நந்திப் பெருமகனே! நாதனை – எந்தக்
கணமும் தொடரும் கணங்களே! பத்தர்
கணக்கிலெனைக் கூட்டச்சொல் வீர்!

எம்மான் திருமுடியில் ஏற்றமுடன் வீற்றிருக்கும்
அம்மா,பா கீரதியே! ஐயனிடம் – உம்பார்வைக்(கு)
ஏங்கிநிற்கும் ஏழைஇவன் என்றுரைத்(து) எந்தையருள் 
வாங்கித் தருவீர் விரைந்து.  

பாலன்ன வெண்மைப் பனிநிலவே! சார்ந்தோர்தம்
பால்எப் பிழையையும் பாராத – சீலனென
நீயறிவாய் அந்த நிமலனை எனையுமவன்
காயாது காக்கக் கழறு. 

கொன்றை மலரே!  குழகன் குழல்முடியில்
என்றும் விரும்பியணி ஏற்றமுள்ளோய்! – சென்றவற்கு
என்றன் நிலையை எடுத்துரைத்து ஆங்கவனை
இன்றே எனக்கருளச் செய்.  

மிடற்றில் கரத்தில் விரிமார்பில் அண்ணல்
இடையில் செவியில்என எங்கும் – படஅரவே!
அண்ணலின் மேனி அலங்கரிக்கும் நீஅடியேன்
விண்ணப்பம் விளம்பாய் அவற்கு.

காமனை எரித்தமுக் கண்ணரைக்கண் ணால்மயக்கி
வாமபா கம்தர வைத்தவளே! – போம்உம்மை
அன்றிவே றெத்துணையும் அற்றஇப் பிள்ளையை
இன்றேகாப் பாற்றுமென ஏவு.

அனந்த் 19-2-2016

Friday, February 5, 2016

மீண்டும் வாராயோ?


திருச்சிற்றம்பலம்


 

      <> மீண்டும் வாராயோ? <>

கட்டிப் பிடித்துனைக் கணமு(ம்)வில காதுமனக்
....கோட்டையின் உட்பு றத்தில்
.....களிப்புமீ தூரநான் காத்துவரும் போதிலே
........கனகசபைச்  செல்வ மே!என் 
..........கண்ணி(ல்)மண் தூவியே காணாமல் சென்றனை
............கடவுள்நீ இருந்த இடத்தில் 

துட்டத்  தனத்தவர் சுற்றமொடு  குடியேறச்
....செய்தெனை வாட்டு முன்றன்
......சோதனை தன்னிலே நீகண்டு வருகின்ற
  ........சுகம்யாது கூறு வாயோ? 
   ……..தொடர்ந்துநீ இங்ஙனம் செய்யும்இதைக் காணுவோர்
...............சொல்பழியைக் கேட்டி டாயோ?

கட்டம் மலிந்தஇக் காசினியில் உழலுவதைக்
....கடந்திட வேண்டி யுன்றன்
… ..கழலடி நிதம்பணிந் தேத்திடுமுன் அடியவர்
.........குறையெல்லாம் தீர்ப்ப துன்றன்
….........கடமையென்(று) உணர்ந்துநீ மீண்டுமென்றன் நெஞ்சுளே
..............கடிதிலே  புகுந்தி டாயோ?

நட்டம் தன்னிலே நாளெல்லாம் கழித்திடலால்
....நான்சொலும் வார்த்தை யில்உன்
…....நாட்டமும் இல்லையோ? நியாயமும்ஈ தாகுமோ?
........நாதன்நீ இலாமல் இங்கே
…........நானினி வாழ்வதில் பயனேதும் உள்ளதோ?
.............நாடியெனுள் வதிந்தி டாயோ?


{21-சீர் ஆசிரிய விருத்தம். வாய்பாடு:
தேமா விளம் காய் காய் விளம் மா தேமா
.. விளம் விளம் காய் விளம் காய் மா தேமா
... விளம் விளம் காய் விளம் காய் மா தேமா}


அனந்த்
5-2-2016