Sunday, August 18, 2013

திருநடனம்

இன்று பிரதோஷ நன்னாள்.

Inline image 1


திருச்சிற்றம்பலம்

           <> திருநடனம் <>

உடலெனுமிப் பெருமைமிகு ஆலயத்தில்
...உள்ளிருக்கும் மனமென்னும் திருவரங்கில்

இடவலமாய் நுரையீரல் குழலைஊதி
.. இசையெழுப்பி அவைநிரப்ப அண்டிநின்று

தடதடென இதயமொரு மத்தளத்தைத்
.. தான்முழங்க அதன்லயத்திற் கேற்றபடி

கடவுளுன(து) அருள்நடனக் காட்சியினைக்
... கண்டுகொளின் வேறெதனை வேண்டுவனே.

(அவை நிரப்ப = திருச்சபையை நிரப்ப)
.. அனந்த் 18-8-2013
==============================
இனிய பாடல்.
ஒரு திருமந்திரப் பாடலை நினைவூட்டியது!
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10711&padhi=711&startLimit=1&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
..வி. சுப்பிரமணியன்
===========

தாங்கள் கண்ட காட்சி அற்புதம்! எங்களுக்குக் கிடைக்கத் திரைகள் பல விலகவேண்டுமே!

மனமென்னும் அரங்கிலவன் ஆடவேண்டின்
   மனவரங்கம் ஆடாமல் அவனைத்தாங்கிச்
சினத்தாலும் விருப்பாலும் வெறுப்பினாலும்
   சிதைவுற்றும் சீரிழந்தும் சிதரிடாமல்
தனக்குத்தான் தலைஎன்னும் ஆணவத்தால்
   தடம்புரண்டு போகாமல் ஒருமிப்புற்றுப்
புனற்றலையான் அடிலயத்தில் இலயமாகிப்
   புலத்(து)உறவைத் துறந்திருக்க வேண்டுமன்றோ?

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Saturday, August 3, 2013

கூடும் வெளியும்

திருச்சிற்றம்பலம்

Inline image 2










<> கூடும் வெளியும் <>

பிறந்த நாள்தொட் டின்றுவரை
.. பேதை என்றன் மனப்பறவை


பறந்து செத்தை பலசேர்த்துப்
.. படைத்த எண்ணக் கூட்டிலுன்னை


மறந்து கிடந்த எனையெழுப்பி
.. வாவென் றழைத்துன் அருளொளிசேர்


திறந்த வானில் திளைக்கவைத்தாய்
... திரும்பேன் இனியென் கூட்டினுக்கே.


... அனந்த்  3-8-2013


============
இனிய பாடல்.

பறவை, கூடு, போன்ற சொற்கள் ஒரு திருவாசகப் பாடலை ஞாபகப்படுத்தின!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81150&padhi=15&startLimit=14&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
8.15.14 - திருவாசகம் - திருத்தோணோக்கம்-14:
உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித் தோணோக்க மாடாமோ. 
வி. சுப்பிரமணியன்