Wednesday, March 28, 2018

விளையாட்டும் விளைவும்


                 திருச்சிற்றம்பலம்              

<> விளையாட்டும் விளைவும் <>


இரண்டற்ற ஒன்றென எங்குமாய் இருந்தநீ எந்தவோர் கார ணத்தால்
.. இறைவன்நீ சீவன்யான் என்றதோர் தோற்றமிங் கென்னுளே புகுத்தி அதனால்

புரண்டிந்த மண்மிசைப் பிறந்துநான் எனதெனப் புந்தியில் புகுந்த நினைப்பால்
புவியுளோர் முன்னொரு பித்தனாய்த் திரிந்திடும் புன்மையைக் கூட்டிவைத்தாய்?

திரண்டுற்ற பிறவியில் சேர்த்திட்ட பாவங்கள் சீவனாம் என்னையுன்பால்
சேரொணா வகையினில் செய்திடும் கொடுமையைச் சற்றுநின் சிந்தைதாங்கி

இரண்டென்னும் மாயையை இறந்திடச் செய்தெனை உன்னுடன் கலக்க வைப்பாய்
ஈசனே! தில்லைபால் என்னையும் ஈர்த்தநீ இதனையும் செய்கு வாயே!

..அனந்த்  28/29-3-2018 (பிரதோஷ நன்னாள்)
 

Tuesday, March 13, 2018

கருணை முகிலோன்

இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்

<> கருணை முகிலோன் <> 

பாதாதி கேசமும் கேசாதி பாதமும் பரவிநான் தில்லை மேவும்
நாதாநீ நாடொறும் ஓயாமல் ஆடிடும் நேர்த்தியில் மயங்கி நிற்பேன்
ஏதேனும் ஓர்விதம் ஈடேது மேயிலா இவ்வெழில் தன்னைப் பாவில்
கோதேனும் இன்றிநான் பாரோர்க்கி யம்பிடப் பரம!நீ வகைசெய் யாயோ?

நிறைபுனல் நதியும் கலைகுறை மதியும் உறைசடை சூடும் பெருமான்காண்
மறையினை நிதமும் முறையுடன் பயிலும் திறமுடை அடியர்க் கருள்வோன்காண் 
கறைமிட றுடையெம் இறையெனும் பெருமை நிறைசிவன் கருணை முகிலோன்காண்
குறைமலி எளியன் பறையுமென் துதியும் பொறையுடன் கொளுமென் பெருமான்காண்.

கொட்டும் துடியுடன் நட்டம் நிதம்புரி சிற்றம் பலமுறை பெருமான்காண்
பட்டின் துகில்நிகர்க் கற்றைக் குழலியள்  பற்றும் பெருமைகொள் பெருமான்காண்
கட்டும் பழவினை முற்றும் விலகிட அத்தம் வழிஅருள் பெருமான்காண்  
மட்டில் புகழுடைச் சிற்றம் பலந்தனில் பத்தர்க் கருள்செயும் பெருமானே.
(அத்தம் கைஇங்கு அபயஹஸ்தம் குறிக்கப்பட்டது.)

..அனந்த் 12/13-3-2018