Friday, December 19, 2014

கருணை மழை

திருச்சிற்றம்பலம் 



<> கருணை மழை <>

பாளம் பலவாய்ச் சிதறுண்ட
..
பாவி யேனின் மனப்புனத்தில்

காள மேக மாய்த்தோன்றி
..
கருணை மாரி பொழிந்துயிரின்

நாளம் வழியே பாயவைத்து
..
நட்டான் பக்திப் பயிரையங்குத்

தாளத் தோடு தில்லையில்பொற்
..
சபையில் ஆடும் எனதிறையே!

 (மனப் புனம் = உள்ளமென்னும் வயல்; காளமேகம் = கறுத்த(கார்) மேகம்; நாளம் = குழாய்)

.. அனந்த் 19-12-2014  

Thursday, December 4, 2014

யாரே நம்புவார் ?


திருச்சிற்றம்பலம்
 


<> யாரே நம்புவார் ? <> 

மேனியோர் மரக தக்கல் மேவிய பவளக் குன்று*
.. மிடற்றிலே நீலக் கண்டி மாணிக்கச் செவ்வி தழ்கள் 
வானமீன் போல மின்னும் வைரப்பல் வரிசை வானோர்
.. வணங்கிடும் அடிகள் பொன்னாம் வாய்த்தஇச் செல்வத் தோடே
ஊன்நிறை ஓட்டை ஏந்தி ஊரெலாம் ஊணுக் காக
.. உலவிடும் ஈச! இந்த உலகுளோர் ஏழை என்றே
ஏனுமை நம்பு வார்என்று எண்ணினீர் அறியேன் நீவிர்
.. எவ்வகை தோன்றி னாலும் ஏகும்என் மனம்உம் பாலே!
 
(*இது பச்சை வண்ண உமையம்மையுடன் இணைந்த செம்மேனிப் பெம்மான் உருவைக் குறிப்பது; கண்டி = கழுத்தணி)
.. அனந்த் 4-12-2014