Wednesday, November 19, 2014

சிற்றம்பலப் பழம்

<> சிற்றம்பலப் பழம் <>



திருச்சிற்றம்பலம்
 
கற்றைச் சடையா!  கனலார் நிறத்தா!
…காதார் குழையழகா!
……கடிமா மலர்பூண் உமையாள் பாகா!
………கணங்கட் கோர்தலைவா!

ஒற்றைத் தனியாய் உருவில் பலவாய்
…உலவும் முழுமுதல்வா!
……ஊனாய் ஊனுள் உயிராய் உறையும்
……….ஒருவா! மாலயனும்

முற்றும் அறியாப் பரமா! முன்னம்
….முனிவர் முன்னிலையில்
……மோனம் பயின்ற குரவா! மறையின்
………முடிவே! தாளிணையைப்

பற்றிப் பிடித்த அடியார்க் கருளும்
…. பரிவே! சிறந்தபெரும்
பற்றப் புலியூர்ச் சிற்றம்பலத்துப்
…. பழமே! பேரருளே!

(பழமே = பழமையானவனே)


அனந்த் 19-11-2014

Tuesday, November 4, 2014

இது தருணம்


திருச்சிற்றம்பலம்


           
                      <> இது தருணம் <>

(பன்னிருசீர் விருத்தம்; சந்தம்: தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தானா தானானா)


கனகமென ஒளியுமிழும் கலுழன்மிசை உலவிவரு மாயோன் சேயோடு
... ககனவெளி தனில்வதியு மமரர்களுங் கயிலைமலை வாயில் சேராநின்(று)

அனவரதம் அரனுனது அடிநிழலில் புகழ்பரவு வேளை நாயேனிங்(கு)
... அழுவிழியுந் தொழுகரமும் அகமுழுதும் உனநினைவும் மேவ நீயோர்நாள்

எனையுமுன தடியவரில் கடைநிலையன் எனும்நினைவில் வாழ்வோன் ஆவானென்(று) 
..இறையுனது மனமதனில் கருதியொரு கணமுனது சேவை தாராயோ?


தனதுகழல் நினையடியர் தமதுதுயர் களைதலைவன் நீயே ஆமென்று
... சகமுணருந் தருணமிது சடிதிஎன முனம்விரைந்து காவாய் தேவேசா

(கலுழன்= கருடன்; ககனம்=ஆகாயம்; வதியும்=வசிக்கும்; சேராநின்று=சேர்ந்து; அனவரதம்=எப்போதும்; உன= உனது; கடைநிலையன்=புறவாயிலில் இருப்பவன்; சேவை=தரிசனம்; சடிதி= விரைவில்; என = எனது)

.. அனந்த் 4-11-2014