Saturday, October 22, 2022

 திருச்சிற்றம்பலம்


                    <> அன்னை அருள் <>


   Chidhambara Natarajar- Sivakami .jpg


மன்றில் நடம்புரியும் மாமணியே நின்னன்பர்

..மன்னி உன்னருளை வேண்டிநிற்கும் வேளையிலே

ஒன்றும் அறியேனை என்னருகே வாவெனநீ  

.. உந்திக் கொணர்ந்தனைவல் லூழின் பிடிசிக்கிக்

கன்றி வாடிநிற்கும் கடையேன்யான் எனக்குன்றன்

.. கருணை மழைபொழியக் காரணந்தான் என்னேயோ

ஒன்றாய் இரண்டின்றி உன்னுடனே உறைந்திந்த

.. உலகைப் புரந்தருளும் உமையாளின் செயலிதுவே.


                                     🌸🌺🌸 

  

                     <> காட்டுத் தீ <>


      Sri Natarajar- அழகுமயம்.jpg


வரம்பில்லாக் காட்டுத்தீ யொத்தஎன தகத்தினிலே

பரந்தெரியும் வல்லகந்தைப் பேரனலை நின்விழியில்

சுரந்திடுமுன் பேரருளாம் தூநீரால் அணைத்திடெனக்

கரங்குவித்து வேண்டிநின்றேன் காத்திடுவாய் எம்மானே


... அனந்த் 21-10-2022 

Friday, October 7, 2022

என்றடைவேன்?

 திருச்சிற்றம்பலம் 



                <> என்றடைவேன்? <>


    

   IMG_0453.JPG


கண்முன் தெரியும் உலகில் காலம்


... கடிதே விரைதல் தெரிகிறது



எண்ணச் சுமையும் இரவும் பகலும்


... ஏறிக் கொண்டே செல்கிறது



உண்ணும் போதும் உறங்கும் போதும்


... உள்ளே நான்,நான் எனுமுணர்வு



எண்ணந் தாண்டி இருப்பாய் ஒளிரும்


.... எழிலில் அமைதி  என்றடைவேன்?

 

                          🌸🌺🌸 



         <> ஆலும் அடியும் <>



         16d6c355-6906-48a8-8e5e-c5502ee302d9.jpg


கல்லாலடிக் கீழமர் தேவ!முன் னாளினில்நீ


கல்லாலடி பெற்றதன் காரணம் ஏதறியேன்


கல்லாவொரு ஏழைஉன் காலினைச் சார்ந்தமைக்கும்


இல்லேனொரு காரணம் இயம்பிட என்னரசே


                     🌸🌺🌸 


அனந்த் 7-10-2022