Tuesday, May 19, 2020

அன்பு தருவாய்

திருச்சிற்றம்பலம் 
















<> அன்பு தருவாய் <>

தனதான தந்ததன தனதான தந்ததன
தனதான தந்ததன தனதானா

தவமேயி ருந்துபல வகையாக வுந்தொழுது
.. தவறாம லன்புசெய வறியாதே
அவமேகி டந்துழலு மடியேனை யுங்கருதி
.. அரனேயு னன்புதர இசைவாயேற்

கவலாம *லென்றனிகர் பிறபேரு முன்றனடி 
.. கதியாக நம்பியருள் பெறுவாரே
சிவகாம சுந்தரியி னுளமேவி டுங்கணவ
 திருவேந டம்புரியு மிறையோனே

நவமான சந்தமொடு மயிலேறு முன்புதல்வ
.. னலமேபு கழ்ந்துபல துதிபாடிப்
பவமாயை யின்றியொரு பரமான வந்தமிகு
.. பதமேய டைந்தவொரு குருநாத

னவனோது விந்தைமிகு கவியா லுளங்குளிரு
.. திவீர மைந்தனுன தொருகாதில்
நவமான வொன்றுசொல வதனா லுவந்தமதி
 நதிசூடு செஞ்சடைய வருளாயே.

(*ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது- திருப்புகழ்) )
(குருநாதன் = அருணகிரிநாதர்; அந்தம் = அழகு; நவமான ஒன்று சொல = புதியதான பிரணவ மந்திரப் பொருளைச் சொல்ல)

பதம் பிரித்து:
தவமே இருந்து பல வகையாகவும் தொழுது
.. தவறாமல் அன்பு செய றியாதே
அவமே கிடந்து உழலும் அடியேனையும் கருதி
.. அரனேஉன் அன்புதர இசைவாயேல்

கவலாமல் என்றன் நிகர் பிறபேரும் உன்றன் அடி
.. கதியாக நம்பி அருள் பெறுவாரே
சிவகாம சுந்தரியின் ளம் மேவிடும் கணவ
 திருவே நடம்புரியும் இறையோனே

நவமான சந்தமொடு மயில் ஏறும் உன்புதல்வன்
.. நலமே புகழ்ந்து பலதுதி பாடிப்
பவமாயை இன்றி ஒரு பரம் ஆன அந்தம்மிகு
.. பதமே அடைந்த ஒரு குருநாதன்

அவனோது விந்தை மிகு கவியால் உளம் குளிரும்
.. அதிவீர! மைந்தன் உனது ஒரு காதில்
நவமான ஒன்றுசொல அதனால் உவந்த மதி

 நதிசூடு செஞ்சடைய! அருளாயே

..அனந்த் 19-5-2020 பிரதோஷம் 

Monday, May 4, 2020

பித்தைத் தருவாய்

திருச்சிற்றம்பலம்
















<> பித்தைத் தருவாய் <>  

பித்தனென் பார்உன்னைப் பேயனென்பார் – உன்மேல்
.. பித்தெனக்(குஈயாயோ?

சித்தத்தில் நீயிருந்தால் – வேறு
.. சித்திகள் வேண்டுவனோ?
அத்தனுன் போலிருந்தால் – அதனின்
… ஆனந்தம் வேறுமுண்டோ?                     (…பித்தனென்பார்)


புத்தியில் நீபுகுந்தால் – நானும்
.. பூரணம் ஆகிடுவேன்
மொத்தமும் நான்என்னும் – உணர்வுள்
… மூழ்கி அமிழ்ந்திடுவேன்                         

அத்தனை அண்டங்களும் – என்றன்
.. அகத்தினுள் ளேயடங்கும் 
வித்துக்குள் ளேமரம்போய் – மறையும்
.. விந்தை நிகழ்ந்துவிடும்.                        (…பித்தனென்பார்)

எத்தை நினைப்பதற்கும் – நெஞ்சில்
.. எண்ணம் இருக்காது
சத்தெனும் ஒன்றில்உறை – மெய்யாம்
.. தத்துவம் நானாவேன்                         

சித்துப் பெருவெளியில் – ஆடும்
.. செல்வனுன் ஆட்டத்துள்ளே
சத்தமெல் லாமடங்கி – மௌன
.. சாகரத் துள்அமிழ்வேன்.                        (…பித்தனென்பார்)


அனந்த்  5-4-2020 சோமவாரப் பிரதோஷம்
ஒலிப்பதிவு: https://drive.google.com/file/d/1ZKxQdgA_xcGzhJyL7nXFCn9hkQO7MiwA/view?usp=sharing