Saturday, September 16, 2017

துணையாய்த் தேர்

            <> துணையாய்த் தேர் <>



















பாரானை விண்ணானைப் பற்றினோர் தம்குறையைப்
பாரானை முக்கட் பரமனைச் –சீர்க்கொன்றைத்
தாரானைத் தன்னடிசேர் அன்பர்க்கு மீள்பிறவி
தாரானை யாரேத்தா தார்?

வார்கடல் சூழுலகின் மையமெனக் காட்சிதரும்
பேரூரென் றூரார்சொல் தில்லையிலே – பேராளன்
தானந்தம் ஆதியிலாத் தன்மையன் என்றுணர்வோர்
ஆனந்தம் கூறவல்லார் ஆர்?

ஓரடியை மண்ணில்வைத் தோரடியை மேற்றூக்கிச்
சீராக ஆடும் சிதம்பரத்தான் – பேர்சொல்லி
ஆறாய்க்கண் நீர்சொரிய அங்கம் புளகிக்கும்
பேறடைந்தார்க் கார்நிகரா வார்?

ஆரார் அவன்பேர் அறையார் அவனழகைப்
பாராதார் யாரே? பதம்பணிந்து – ஏறேறி
ஊரார்முன் ஊரும் ஒருவனைத் தில்லையெனும்
ஊரானை ஓராதார் ஆர்?

பேரானைத் தோலுடுத்தும் பேயானைப் பித்தனெனும்
பேரானைத் தன்னிலையில் பேரானை – தேராரைச்
சேரானைச் செல்வி சிவகாமி நேயனெனுஞ்
சீரானை உன்துணையாய்த் தேர்.

(தேரார் – தெளிந்த அறிவில்லாதார்பகைவர்

Saturday, September 2, 2017

தவறாமோ?

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 

                 


                                <> தவறாமோ? <> 

வான்கொண்ட தேவர்களும் மறைகண்ட முனிவரும்
.. மாலுமய னாரு மறியாத்
தேன்கண்ட பாதமலர் சிரம்கொண்ட அடியவர்
.. தினமெலாம் காணு(ம்) விதமாய்
மான்கொண்ட கரமுமொரு மழுக்கொண்ட கரத்தொடு
.. மன்றில்நீ ஆடு மெழிலை
ஏன்கண்டு களிக்கின்றாய் எனக்கேட்க லாகுமோ?
.. இதுவுமொர் களியுன் றனுக்கோ?                                                        1.

கார்கொண்ட குழலியின் கைகொண்ட தேவன்நீ
.. கயிலையின் மேல தெனவோர்
சீர்கொண்ட தில்லையாம் பேர்கொண்ட ஊரதில்
.. சித்தெனும் வத்து வடிவில்
நேர்கொண்ட  ஞானியர் அகங்கண்டு மகிழ்வதை
.. நேரிலே எவரும் காணத்
தார்கொண்ட தாளொடு சதிர்கொண்டு நடித்தல்நான்
.. தரிசனம் செய்தல் தவறோ?

(சித்மெய்யறிவு, பரம்பொருள்வத்துவஸ்து, இங்கு, பருப்பொருள் சிதம்பரத்தில் சிதாகாசமாகவும்நடராச வடிவாகவும் ஐயன் காட்சி தருவதைக் குறிப்பதுநேர் = உண்மைதகுதி)                       2. 

சூல்கொண்ட தாய்தரு ஊண்கொண்டு வளர்ந்தொரு
.. துயரிலா திருக்கும் கருப்போல்
கோல்கொண்டு நோய்பல குடிகொண்ட எனக்கும்நீ
.. குறைவிலா தருள்வை எனவுன்
பால்கொண்ட நம்பலால் நீகொண்ட பாலன்நான்
.. பாங்குடன் கனக சபையில்
கால்கொண்டு தாண்டவம் களிகொண்டு நீசெயல்
.. காண்பதோர் பெரிய தவறோ?  

(நம்பல் நம்பிக்கைபாங்குழகுஒழுங்கு)                                   3.
  
ஊன்கொண்ட உடலமிஃ(து) உயிர்கொண்ட போதிலே
.. உன்நினைப் பென்னு மொன்றை
நான்கொண்டு வந்திலேன் நீகொண்டு வைத்தனை
.. ன்(கு)இதை அறிவை முன்னம்
தேன்மண்டு கூந்தலாள் துணைகொண்டிவ் வெளியனைத்
.. தில்லையில் ஆண்ட பாங்கைக்
கூன்கொண்ட பிறையினை முடிகொண்ட கூத்தனே      
.. கூறுவாய் உலகி னுக்கே.                                                                           4.

கான்கொண்டு சென்றிடக் கோல்கொண்டென் மேனியைக்
.. கடத்திடும் வேளை நெருங்கி
ஊன்கொண்ட உருவமும் நான்கொண்ட தம்பமும்
.. உதவிடாப் போதில் இவனை
வான்கொண்டு வா’வென நீதண்ட னுப்பிட
.. மார்க்கமொன் றுள்ள தெனவே
நான்கண்டு கொண்டனன் நீநடம் ஆடலை
.. நாடொறும் காணல் அதுவே.            

(தம்பம் = வீண்/தற்பெருமைதண்டு = சிவிகை)                                5.

அனந்த் 3-9-2017

(எழுசீர் ஆசிரிய விருத்தம்.  படம்: ‘நடராசப் பெருமான்’ திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2001)