Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - June 30 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

சிக்கெனப் பிடித்தாய்! (3)

வளைதுதிக் கையும் தந்தமும் கொண்ட
.. மகனையும் அவன்பசி ஆற்ற
அளைந்துநல் அமுதம் அளித்திடும் இளவல்
.. அவனையும் கண்டவர் அழகில்
திளைத்திடுங் காலை திருப்பெருந் துறையோய்!
.. தேடிவந் தெனையுமோர் மகவாய்
வளைத்துநீ உன்பால் சிக்கெனப் பிடித்தாய்
... மற்றுநான் என்செயும் இனியே

இன்று திருப்பெருந்துறைத் தலத்தில், மாணிக்கவாசகப் பெருமான் காலையில் இரதத்தில் பவனி வந்து, மாலை கைலாசகிரி வாகனத்தில் உலாவரும் பெருநாள். பரமசிவன் உலகிற்கெல்லாம் தந்தையாதலால், அவன் என்னையும் அவனுடைய பிள்ளைகளில் ஒருவனாகக் கொண்டுள்ளான் என்ற கருத்தில் சற்றுமுன் எனது இன்றைய பாடலை இட்டேன். இட்ட பின், நான் எழுதிய விதத்தில் பேராசையும் பணிவின்மையும் தொனிக்கிறது என்று தோன்றியதால், பாடலைக் கீழுள்ளவாறு மாற்றியுள்ளேன்:


வளைதுதிக் கையும் தந்தமும் கொண்ட
.. மகனையும் அவன்பசி ஆற்ற
அளைந்துநல் அமுதம் அளித்திடும் இளவல்
.. அவனையும் கண்டவர் அழகில்
திளைத்திடுங் காலை திருப்பெருந் துறையோய்!
.. சேவகம் செய்வதற் காக
வளைத்துநீ என்னைச் சிக்கெனப் பிடித்தாய்
,,. மற்றுநான் என்செயும் இனியே

No comments: