Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - May 17 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

சிவனே என்றிரு!

ஆடித் திரிவான் அம்பலத்தே
.. அதனால் அடையும் பசியகல
ஓடித் திரிவான் ஊரூராய்
.. ஊனை இரந்தே உடன்அதன்பின்
நாடித் திரிவான் நாமம்சொல்
.. நல்லோர் குழுவை ஈங்கிவனைத்
  தேடிப் பிடிக்கச் சிறந்தவழி
.. சிவனே எனநாம் இருப்பதுவே!

1 comment:

ananth said...

அன்புள்ள அனந்த், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் ஒப்பில்லா கவிதை ஒன்று தருகின்றீர். அற்புதம் அவையாவும். அது பற்றிய ஒரு சிந்தனை.

*பிரதோஷம் பார்க்கணும் பஞ்சாங்கம் தாராய்*
*கரந்தட்டிச் சொன்ன கணத்தில் - மறவார்*
*அனந்து மறிவிப்பார் அந்நா ளதனை *
*மனந்திறந்து சொன்னாளம் மா.*
-------------------------
பிரதோஷம் நாளில் பிறக்கும்பா அருமை ;
...பேசிடும் அவையாவும் பெம்மானின் பெருமை.
கரகோஷம் கொட்டிக் களிப்போம் கேட்டு ,
…காணோம் இவைபோலக் ககனத்தில் பாட்டு.
பிறர்தோஷம் பாராப் பெற்றியிவர் பெற்றி ;
…பெற்றிடுவார் வாழ்வில் பெருமளவு வெற்றி.
அரன்தாளைப் பணிந்திடுவோம் அனந்த்வழி நாடி,
…அனைவருமே காண்போம் அவனருளும் கோடி.

அ கி. வரதராஜன். 18-5-2008